தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா சோதனை- குஜராத், மே.வ.-ல் குறைவு
டெல்லி: இந்தியாவில் தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தலின்படி 10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது; மேற்கு வங்கம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பரிசோதனைகள் குறைவாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ராஜேஷ் பூஷன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பல்ராம் பார்கவா ஆகியோர் கொரோனா பாதிப்பு குறித்து கூறியதாவது:
தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு- முதல் முறையாக 4,526 பேருக்கு கொரோனா
தமிழகம், மகாராஷ்டிராவில் 50% பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 86% என்பது 10 மாநிலங்களில்தான் இருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 50% உள்ளது. 8 மாநிலங்களில் 36% பாதிப்பு இருக்கிறது. பல மாநிலங்களில் குணமடைதல் விகிதம் சராசரியைவிட அதிகமாகவே இருக்கிறது.
குணமடைதல் எண்ணிக்கை அதிகம்
கொரோனா மரணங்கள் இறப்பு விகிதம் 2.6% ஆக இருக்கிறது. இது படிப்படியாக குறைந்தும் வருகிறது. கொரோனாவால் பாதித்து குணமடைந்து வருவோர் எண்ணிக்கையானது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையைவிட 1.8 மடங்கு அதிகமாக இருக்கிறது.
10 லட்சம் பேரில் 140 பேருக்கு சோதனை
10 லட்சம் பேரில் 140 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. இதனை நமது நாட்டில் தமிழகம் உட்பட 22 மாநிலங்கள் பின்பற்றுகின்றன. இந்தியாவில் சராசரியாக 10 லட்சம் பேரில் 201 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
2 மாநிலங்களில் பின்னடைவு
இந்தியாவில் டெல்லியில்தான் மிக அதிகமாக 10 லட்சம் பேரில் 977.98 பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 563 பேருக்கும் மகாராஷ்டிராவில் 197 பேருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குஜராத். மேற்கு வங்க மாநிலங்கள் மிகவும் குறைவான பரிசோதனைகளை நடத்துகின்றன.
2 வகை கொரோனா மருந்துகள்
இந்தியாவில் கொரோனாவுக்கு 2 வகையான தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகள் முதலில் விலங்குகளுக்கு கொடுக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு உரிய சோதனை நடத்துவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு இருவரும் கூறினர்.
தனிமைப்படுத்திய ஜிதேந்திர சிங்
இதனிடையே மத்திய அமைச்சர் ஜிதேந்திர ஜிங், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஜிதேந்திர சிங்குடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் ஜிதேந்திர சிங் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.