வட மாநிலங்களில் ரெட் அலர்ட்... புழுதி புயல் தாக்கும்... வெயில் கொளுத்துமாம்!
டெல்லி : வட மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் அளவு மிக கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் இயல்பை காட்டிலும் அதிக வெப்பம் நிலவி வருகிறது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கடந்த வாரம் ரெட் அலர்ட் எனப்படும் வெயில் அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
இந்தாண்டு நாட்டிலேயே அதிகபட்ச வெப்பமாக, ராஜஸ்தானில் கடந்த வாரம் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மத்தியப் பிரதேசம் , ராஜஸ்தான், ஹரியானாவில் கடும் வெயில் கொளுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சண்டிகர், பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் சுமார் 40 கிமீ வேகத்தில் புழுதிப் புயலும் அதைத் தொடர்ந்து இடியுடன் கூடிய புயல் காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.. தமிழக விவசாயிகள் ஆவேசம்
இதற்கிடையே, உலகின் அதிவெப்பமான 15 இடங்களின் பட்டியலில் 10 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. கோடை வெயில் கொளுத்தும் நிலையில், இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகள் வெப்பத்தின் பிடியில் உள்ளன. சிம்லா, நைனிடால், ஸ்ரீநகர் போன்ற குளிர் பிரதேசங்களில் கூட இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.
அனல் காற்று அதிகமாக வீசுவதால், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி உள்ளனர்.
இதனிடையே, இலங்கையின் தென்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இலங்கையில் பருவமழை தொடங்கினால் 2 நாட்களுக்குள் கேரளாவிலும் மழை தொடங்க வேண்டும். ஆனால் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பருவமழை தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. இருப்பினும் வரும் 8ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.