100 ஆண்டுகளுக்கு பின் இப்படி நடக்கிறது.. டெல்லியில் நடுங்க வைக்கும் குளிர்.. ரெட் அலெர்ட் வார்னிங்!
டெல்லியில் நிலவி வரும் மிக மோசமான குளிரால் அங்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
டெல்லி: டெல்லியில் நிலவி வரும் மிக மோசமான குளிரால் அங்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. அங்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் மிக குறைவான வெப்பநிலை நேற்று பதிவானது.
புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர்நிலவி வருகிறது. அதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் உறை நிலைக்கும் குறைவாக வெப்பநிலை நிலவி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் தற்போது டெல்லியிலும் மிக மோசமான குளிரான வானிலை நிலவி வருகிறது. போக போக டெல்லியில் பனி மேலும் அதிகரித்து வானிலை இன்னும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது .
இப்போது என்ன
டெல்லி கடந்த வாரம் வரம் 5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வந்தது. தற்போது அந்த வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாலை டெல்லியில் வெப்பநிலை வெறும் 2.4 டிகிரி செல்ஸியஸ் மட்டுமே இருந்தது. மிக அதிக அளவில் பனி பெய்து, குளிரான காற்று வீசு, மொத்தமாக டெல்லியை பனி மூட்டம் ஆக்கிரமித்தது.
குறையும்
டெல்லியில் நிலவி வரும் இந்த அதீத பனி மூட்டம் காரணமாக, அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் நேற்று மட்டும் 4 விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டது. இன்னும் சில நாட்களுக்கு டெல்லி செல்லும் பல விமானங்கள் இப்படி திருப்பி விடப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் நேற்று மட்டும் 24 ரயில்கள் 3 மணி நேரம் வரை டெல்லியில் தாமதமாக புறப்பட்டது.
மீண்டும் வருகிறது
இதற்கு முன் டெல்லியில் 1996ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி 2.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. அதன்பின் அதேபோல் குறைவான வெப்பநிலை மீண்டும் நேற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் 1901க்கு பின் இரண்டாவது மிக குறைவான வெப்பநிலை நேற்றுதான் பதிவாகி உள்ளது. 1901ம் ஆண்டும் இதேபோல் டெல்லியில் 2.4 டிகிரி செல்ஸியஸ் பதிவானது குறிப்பிடத்தக்கது.
ரெட் அலெர்ட்
இது போக போக குறையவும் வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் டெல்லிக்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கும் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்திற்கு மஞ்சள் அலெர்ட் விடப்பட்டுள்ளது.
மிக மோசம்
அதேபோல் இமாச்சலப்பிரதேசம், மணாலி ஆகிய பகுதிகளில் உறை நிலைக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகி உள்ளது. மிகவும் குறைவாக இமாச்சலில் உள்ள கெய்லாங் பாகுதியில் வெறும் -11.5 டிகிரி செல்ஸியஸ் நிலவியது குறிப்பிடத்தக்கது.