ரூ. 100ஐ தாண்டிய பெட்ரோல் விலை... காரணம் முந்தைய அரசு தான்... பிரதமர் மோடி குற்றச்சாட்டு
டெல்லி: நாட்டிற்கு தேவையான எரிசக்திக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்காததாலேயே இப்போது எரிபொருள்கள் விலை உயர்ந்து வருவதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
இந்நிலையல், இறக்குமதியைக் குறைக்க முந்தைய அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுக்காததே விலையேற்றத்திற்குக் காரணம் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "2019-20ஆம் ஆண்டில் நமது நாட்டிற்குத் தேவையான எரிபொருள்களில் 85 சதவிகிதத்தையும் கேஸ் தேவைகளில் 53% சதவிகிதத்தையும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
முந்தைய அரசு
ஒரு நாடு இவ்வளவு தூரம் இறக்குமதியைச் சார்ந்து இருக்கலாமா? நாட்டிற்குத் தேவையான எரிசக்திக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன. இதனாலேயே தற்போது நடுத்தர வர்க்கம் அதிக சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்" என்று காங்கிரஸ் அரசை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
எத்தனால் கலப்பு
தற்போதுள்ள மத்திய அரசு நடுத்தர வர்க்கத்தின் கவலைகளை உணர்ந்திருப்பதாகவும் இதனாலேயே பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் விதத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். கரும்பிலிருந்து எடுக்கப்படும் எத்தனால் இறக்குமதியைக் குறைக்க உதவுவதோடு விவசாயிகளுக்குக் கூடுதல் வருமான ஆதாரத்தையும் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
மத்திய அரசு தற்போது எரிசக்தி இறக்குமதி சார்புநிலையைக் குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், 2030ஆம் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலில் 40 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்தே உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இயற்கை எரிவாயுவிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.