2018ல்தான் இந்தியாவில் மத வன்முறைகள் அதிகம்.. புத்தாண்டிலாவது புது வசந்தம் பிறக்குமா?
டெல்லி: 2018ம் ஆண்டில்தான் இந்தியாவில் அதிகபட்சமாக மத ரீதியிலான வெறுப்பு குற்றச்செயல்கள் அதிகம் நடந்துள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
நல்ல நேரம், அதாவது, 'அச்சே தின்' வருகிறது என்று, நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து 2014ல் ஆட்சியை பிடித்தார். ஆனால், நடந்தது என்னவோ, மத நல்லிணக்கத்திற்கு கெட்ட நேரம்தான்.
'ஹேட் க்ரைம் வாட்ச்' என்ற அமைப்பு, ஃபேக்ட் செக்கர், ஆமன் பிராடிரி உள்ளிட்டவை இணைந்து நடத்திய ஆய்வில், 2018ம் ஆண்டு இந்தியாவில் மிக அதிகமாக மத வெறுப்பு சார்ந்த குற்றச்செயல்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுபான்மையினர்
டிசம்பர் 26ம் தேதி வரையிலான நிலவரப்படி 93 தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. அதில், பாதிக்கப்பட்டவர்கள் 75 சதவீதம் பேர் சிறுபான்மையினர். விடைபெறக்கூடிய இந்த வருடத்தில், மத வெறுப்பால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 30. 2009ம் ஆண்டுக்கு பிறகு இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை. மேலும் 305 பேர் காயமடைந்துளள்ளனர்.
யோகி ஆதித்யநாத்
2017ம் ஆண்டில் மத வெறுப்பு சம்பவங்களில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், காயமடைந்தோர் எண்ணிக்கை இவ்வாண்டுடன் ஒப்பிட்டால் பாதிக்கும் குறைவு. இந்த பட்டியலில் யோகி ஆதித்யநாத் ஆளக்கூடிய உத்தர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. 27 தாக்குதல் சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன. பாஜக கூட்டணியுடன், நிதீஷ் குமார் ஆட்சி நடைபெறும் பீகாருக்கு 2வது இடம். 10 சம்பவங்கள் நட்துள்ளன.
கர்நாடகா
ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகா ஆகியவை முறையே, 3 முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. இந்த சம்பவங்கள் நடைபெற்றபோது, பிற மாநிலங்களில் பாஜக அல்லது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதிலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியும், கடந்த சில மாதங்களாக மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியும்தான் நடக்கிறது. இருப்பினும், டாப் 5வது இடத்தை கர்நாடகா பிடித்துள்ளது.
மத ரீதியாக
2018ல் நடைபெற்ற, 81 தாக்குதல் சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சம் 60 சதவீதம் முஸ்லீம்கள். 14 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். 25 சதவீதம் பேர் இந்துக்கள். இந்துக்கள் மீது இவ்வாண்டில் 20 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வெறுப்பு
2009ம் ஆண்டு முதல் இதுவரை, இந்தியாவில் மத வெறுப்பு வன்முறைகள் 280 பதிவாகியுள்ளன. இதில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 692 பேர் காயமடைந்துள்ளனர். இவற்றில், 82 சதவீத வன்முறைகள் இந்துக்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும், 17 சதவீத வன்முறைகள் முஸ்லீம்களால் முன்னெடுக்கப்பட்டதாகவும், இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
{document1}