வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி.. மிடுக்காக அணிவகுத்த வீரர்கள்.. கண்டுகளித்த மக்கள்!
டெல்லி: குடியரசு தினத்தையொட்டி அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது வாகா - அட்டாரி எல்லையில் இனிப்புப் பரிமாற்றம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக அவ்வப்போது இந்த நிகழ்வு தடைபட்டு வந்தது. இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தும் போது, இனிப்புப் பரிமாற்றத்தை இந்தியா நிறுத்தி வைப்பது வழக்கம்.
கடந்த வருடம் இந்த இனிப்பு பரிமாற்றம் பெரும் பாதுகாப்பிற்கு இடையில் நடைபெற்றது. குடியரசு மற்றும் சுதந்திர தினத்தின் போது அட்டாரி - வாகா எல்லையில் கோடி ஏற்றுவது வழக்கம். காலையில் கொடி ஏற்றி இரண்டு நாட்டு வீரர்களும் இனிப்பு பரிமாறிக்கொள்வார்கள்.
மாலையில் கொடியை இறக்கிவிட்டு, இரண்டு பக்கமும் இரண்டு நாட்டு வீரர்களும் சிறிய அணிவகுப்பை நடத்துவார்கள். வீரமாக தங்கள் மீசையை முறுக்கி வீரர்கள் அணிவகுப்பு நடத்துவார்கள். அதன்பின், இரண்டு நாட்டு வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம்.
#WATCH: Beating retreat ceremony at the Attari-Wagah border on #RepublicDay. pic.twitter.com/a1CwoWqUnC
— ANI (@ANI) January 26, 2020
இதை காண பல நூறு பேர் வருவது உண்டு. அதேபோல் இன்று குடியரசுத் தினத்தை முன்னிட்டு காலையில் கொடி ஏற்றப்பட்டு, மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியை ஏராளமான பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
எல்லையில் இரண்டு நாட்டு வீரர்களும் வாகா கேட்டை திறந்து, கைகுலுக்கி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ராணுவ வீரர்களின் மிடுக்கான நடையுடன் கோடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது.