அசத்தலாக அணிவகுத்த அயோத்தி மாடல்...முதல் பரிசை தட்டிச் சென்ற உ.பி.,
டெல்லி : இந்த ஆண்டு டில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கண்களை கவரும் வகையில் இடம்பெற்ற உத்திர பிரதேச மாநிலத்தின் அலங்கார வாகனம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 9 மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் துணை ராணுவ படையினர், பாதுகாப்பு அமைச்சகத்தின் 6 வாகனங்கள் என மொத்தம் 32 அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றன. ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பாக இடம்பெற்ற 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு உ.பி., மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
உ.பி., அலங்கார வாகனம், மிகப் பழமையான அயோத்தி நகரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. வாகனத்தின் முன்புறம் வால்மீகி மகரிஷி ராமாயணம் எழுவது போன்ற சிலை, ராமர் கோயிலின் மாதிரி வடிவம், அழகாக ஜொலித்த தீப உற்சவம், ராமாயணத்தின் பல்வேறு கிளை கதைகளை விளக்கும் வடிவங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
இது பற்றி உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், எங்கள் மாநிலத்தின் அலங்காரம் வாகனம் முதல் பரிசினை பெற்றுள்ளது மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றார். இரண்டடி உயரம் கொண்ட முதல் பரிசிற்கான கோப்பையை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வழங்கினார்.
சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்த திரிபுரா மாநில அலங்கார வாகனம் 2வது பரிசினையும், பூமி தெய்வத்தை மையக் கருத்தாக கொண்டு அமைக்கப்பட்டிருந்த உத்திரகாண்ட் மாநில வாகனம் 3 வது பரிசினையும் பெற்றுள்ளன.