இன்றைய குடியரசு தின விழாவில் ஒரு சிறப்பம்சம் இருந்தது கவனித்தீர்களா!
Recommended Video
டெல்லி: இன்றைய குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் ஒரு ஒற்றுமையை நீங்கள் பார்த்திருக்க முடியும்.
அனைத்து ஊர்திகளும் ஏதாவது ஒரு வகையில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருந்தன. அவரது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை எடுத்துக்காட்டும் வகையில் அலங்கார ஊர்திகள் அமைக்கப்பட்டிருந்தன.
இது மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்தி வருடம் என்பது தான் இந்த சிறப்பு அஞ்சலிக்கு காரணம்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 16 அலங்கார ஊர்திகளும், மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகத்தைச் சேர்ந்த ஆறு ஊர்திகளும் என்று மொத்தம் 22 அலங்கார ஊர்திகள் இதில் பங்கேற்றன.
ஒவ்வொரு ஊர்தியிலுமே மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. தமிழக அலங்கார ஊர்தியில் மகாத்மா காந்தி மதுரைக்கு வரும்போது விவசாயிகளை சந்தித்ததன் காரணமாக மேலாடையைத் துறந்த நிகழ்வு இடம் பெற்றிருந்தது. டெல்லி யூனியன் பிரதேசத்தின் அலங்கார ஊர்தியில் மகாத்மா காந்திக்கும் டெல்லிக்கும் உள்ள தொடர்புகள் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
மேற்கு வங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தியில் மகாத்மா காந்தி கொல்கத்தாவில் தங்கியிருந்த நிகழ்வும், ரவீந்திரநாத் தாகூருடன் அவருக்கு இருந்த தொடர்பும் என இருவேறு காட்சியமைப்புகள் இடம்பெற்றிருந்தன.
இப்படியாக, இந்த வருட சுதந்திர தின அலங்கார ஊர்தி ஊர்வலம் அனைத்துமே மகாத்மா காந்தியின் புகழுக்கு புகழ் சேர்ப்பது போல இருந்தன.