குடியரசு தின விழா: மேற்கு வங்கம், மகாராஷ்டிராவையடுத்து கேரள ஊர்திக்கும் அனுமதி இல்லை.. பின்னணி என்ன?
டெல்லி: மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, கேரள மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கும், குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதிலும், தலைநகர் டெல்லியில், விழா உச்சகட்ட கொண்டாட்டங்களுடன் நடைபெறும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்கள் சார்பில், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இந்த விழாவில் பங்கேற்கும்.
இதற்கான ஊர்தி மாதிரிகள் குறித்த தகவல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம், அளித்து ஒப்புதல் பெறப்படும். ஆனால் இவ்வாண்டுக்கான, ஊர்தி தேர்வில், பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஏனெனில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் பீகார் ஆகிய மாநில ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முதல் இரு மாநிலங்களிலும், எதிர்க்கட்சிகளின் ஆட்சிகள் நடக்கிறது. எனவே இந்த விவகாரம் அரசியல் சர்ச்சைக்கு காரணமாகியது.
இப்போது இடதுசாரிகள் ஆளும் கேரளாவின் அலங்கார ஊர்திக்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. தெய்யம் மற்றும் கலமண்டலம் ஆகிய கேரளாவின் பாரம்பரிய கலைகள் அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தன. நீர் நிலைகள், கதக்கலி, மோகினியாட்டம் போன்றவையும், இதில் இடம் பெற்றன. ஆனால், அனுமதிதான் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், இந்தியாவின் வேற்றுமை, கலாச்சாரம், பண்பாடு போன்றவை காண்பிக்கப்பட வேண்டிய ஒரு மேடை குடியரசு தின அணிவகுப்பு. ஆனால் இப்படி பெரிய மாநிலங்களை கூட புறக்கணித்தால், அந்த நோக்கம் நிறைவேறாது, என்று கண்டனம் தெரிவித்தார்.
அதேநேரம், பாஜக ஆளும் மாநிலங்களான, ஹரியானா, உத்தராகண்ட், திரிபுரா, அருணாச்சல பிரதேசம் போன்றவற்றின் ஊர்திகளுக்கும் அனுமதி கிடைக்கவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. எனவே இதை அரசியலாக்க வேண்டாம் என்கிறது மத்திய அரசு வட்டாரம்.
Defence Ministry's list of shortlisted participants(tableaux) for Republic Day Parade 2020. pic.twitter.com/adKiUabpxQ
— ANI (@ANI) January 3, 2020
2020ம் ஆண்டு குடியரசு தின விழாவிற்காக, 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 24 அமைச்சகங்கள் என மொத்தம் 56 ஊர்திகளுக்கான மாதிரிகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 16 மாநிலங்கள், 6 அமைச்சகங்கள் உட்பட 22 மாதிரிகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இதுகுறித்து முடிவெடுக்க 5 ஆலோசனை கூட்டங்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.