தம்மாத்துண்டு கரப்பான்பூச்சிக்கே ஊரை கூட்றோமே.. இந்தா பாருங்க!.. ராட்சத கரப்பான்பூச்சி கண்டுபிடிப்பு
டெல்லி: இந்திய பெருங்கடலில் ஆழத்தில் ஒரு ராட்சத கரப்பான்பூச்சியை சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிங்கப்பூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு 2018-ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா கடற்கரையில் உள்ள இந்திய பெருங்கடலில் யாரும் இதுவரை ஆய்வு செய்யப்படாத ஒரு இடத்தில் ஆய்வை நிகழ்த்தியது. அதாவது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேஷிய அறிவியல் கழகத்தின் கடல்சார் ஆய்வுக்கான ஆராய்ச்சி மையம் ஆகியவை இந்த ஆய்வை நடத்தின.
அப்போது ஸ்டார் வார்ஸ் டார்ட் வேடரின் ஹெல்மெட்டை அணிந்திருப்பது போல் ஒரு உயிரினம் இருப்பதை கண்டறிந்தார்கள். இரு ஆண்டுகள் நடத்திய ஆய்வின் முடிவில் அது கடலில் வாழும் ராட்சத கரப்பான்பூச்சி என கண்டறிந்தனர்.
சூப்பர் ஜெயண்ட்
அதன் பெயர் பாத்தினோமஸ் ராட்சசா, சூப்பர் ஜெயண்ட் பாத்தினோமஸ் என்ற புதிய ரகமாகும். இந்த ஆய்வு முடிவுகள் ஜூலை 8-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ராட்சச கரப்பான்பூச்சியானது அதன் இனத்தில் மிகப் பெரிய பூச்சி இனமாகும். நண்டுகள், இரால்களுடன் தொடர்புடையவையாகும். இவை பசிபிக், இந்திய பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் கடலில் காணப்படுகின்றன.
ஆழத்தில் உணவு
கடல் கரப்பான் பூச்சிக்கு 14 கால்கள் உள்ளன. உணவை தேடி கடலின் ஆழத்திற்கு செல்ல மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதன் தலையும் கண்களும் டார்த் வேடர் போல் உள்ளது. இது சுமார் 50 செ.மீ. நீளம் இருக்கும். பொதுவாக இவை 33 செ.மீ.க்கு மேல் வளராதாம். ஆனால் இது 50 செ.மீ. வரை உள்ளதால் இவை சூப்பர் ஜெயிண்ட்ஸ் என அழைக்கப்படுகின்றன.
12 புதிய உயிரினங்கள்
இந்த ஆய்வு குழுவினர் இரண்டு வாரங்களில் 63 இடங்களில் ஆய்வு செய்து ஜெல்லிமீன்கள், புழுக்கள், நண்டுகள், நட்சத்திர மீன்கள் உள்ளிட்ட ஆழ்கடலில் வசிக்கும் 12 ஆயிரத்திற்கும் மேலான மாதிரி உயிரினங்களை கொண்டு வந்தனர். இந்த மாதிரிகளில் 800 இனங்கள் இருந்தன. அவற்றில் 12 உயிரினங்கள் ஆய்வாளர்களுக்கே தெரியாதாம்.
ஆர்வம் இல்லை
இந்த ராட்சத கரப்பான்பூச்சிகள் திமிங்கலங்கள் மற்றும் மீன் போன்ற இறந்த கடல் விலங்குகளின் எச்சங்களை சாப்பிடும். இந்த பூச்சியால் உணவே இல்லாமல் நீண்ட காலத்திற்கு வாழ முடியும். இந்த கடல் கரப்பான்பூச்சியில் அடர்த்தியான ஓடும், குறைந்த அளவிலான இறைச்சியும் இருப்பதால் இவற்றை பிடிக்க வேட்டைக்காரர்கள் ஆர்வம் காட்டவில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.