பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அவசியமில்லையா? கொந்தளித்த எதிர்க்கட்சிகள்.. காங்கிரசை கை காட்டிய அமைச்சர்
டெல்லி: அரசு பணிகளின் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் லோக்சபாவில் இன்று பெரும், அமளி ஏற்பட்டது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு, இட ஒதுக்கீடு வழங்காமல், காலிப் பணியிடங்களை நிரப்பும் உத்தரகாண்ட் அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்து குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.
ஆனால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கேட்பதற்கு எந்த ஒரு தனி நபருக்கும் அடிப்படை உரிமையும் இல்லை என்றும் தீர்ப்பளித்தனர்.
இந்த பிரச்சினை இன்று லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிரொலித்தது. இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாஜக கூட்டணியை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்தன.
லோக்சபாவில், இன்று லோக் ஜனசக்தி எம்பியான சிராக் பாஸ்வான் பேசுகையிில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தனது கட்சி எதிர்க்கிறது என்று கூறினார். "வேலைகள், பதவி உயர்வுகள் ஆகியவற்றிற்கான இடஒதுக்கீடு ஒரு அடிப்படை உரிமை அல்ல என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை லோக் ஜான் சக்தி கட்சி ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் தலையிடுமாறு மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார்.
Defence Minister Rajnath Singh in Lok Sabha on SC decision that reservations for jobs, promotions, is not a fundamental right: The Social Welfare Minister will soon make a statement. Please wait for him to make his statement. Congress party is politicising this sensitive matter. pic.twitter.com/3b8mswwy1P
— ANI (@ANI) February 10, 2020
ஆனால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒரு "உணர்வுப்பூர்மான பிரச்சினை" என்றும், சமூக நீதித்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அமைச்சர் தாவர்சந்த் கெலோட் பேசுகையில், உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2012ல் அரசு எடுத்த முடிவு காரணமாகத்தான் கோட்டா மீதான நீதிமன்ற உத்தரவு வெளியாகியுள்ளது. எனவே இதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றார். இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.