ஜாதிய கட்டமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீடும் தொடரும்: ராம்விலாஸ் பஸ்வான்
டெல்லி: நாட்டில் ஜாதிய கட்டமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீட்டை அகற்றிவிட முடியாது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
அரசு பணிகளில் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு பெரும் சர்ச்சையாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சிகள் நேற்று கேள்வி எழுப்பின. இடஒதுக்கீட்டில் எழுந்துள்ள பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
இது தொடர்பாக எஸ்.சி, எஸ்.டி. எம்.பிக்களை அழைத்து டெல்லியில் ராம்விலாஸ் பஸ்வான் ஆலோசனை நடத்தினார் . அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பஸ்வான், இந்த நாட்டில் ஜாதிய கட்டமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீடும் இருக்கும்; அதை அகற்ற முடியாது என கூறினார்.
மேலும் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்பதாகவும் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.