”கடின உழைப்பாளி சாவர்க்கர்” - பிறந்தநாளன்று ட்விட்டரில் புகழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி
டெல்லி: இந்துத்துவ தலைவர் சாவர்க்கர் ஒரு கடின உழைப்பாளி என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்து மகா சபை நிறுவனரும், ஆர்.எஸ்.எஸ், அமைப்பின் சூத்திரதாரிகளுல் ஒருவருமான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ சித்தாந்த கட்சிகளாலும் அமைப்புகளாலும் தலைவராக போற்றிப் புகழும் சாவர்க்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் சாவர்க்கர் பிறந்தநாளன்று அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "அன்னை பாரதியின் கடின உழைப்பாளியான மகன் வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துகிறேன்." என அவர் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிகார் வாஜ்பாயும் தானும் சாவர்க்கரை பாராட்டி பேசிய உரைகளை காணொலியாக தொகுத்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பிறந்த சாவர்க்கரை சுதந்திர போராட்ட தியாகி என பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. ஆனால், இந்த கூற்றை காங்கிரஸ், இடதுசாரிகள், திராவிட கட்சிகள் மறுத்துள்ளன.
அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் வெள்ளையருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் என பல ஆண்டுகளாக வரலாற்று ஆதாரங்களுடன் அவர்கள் தெரிவித்தும் வருகின்றனர். இதனை ஆமோதிக்கும் வகையில் கடந்த ஆண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மகாத்மா காந்தியின் அறுவுறுத்தலின்படியே சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார் எனக்கூறியது அப்போது சர்ச்சைக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது.