3 வருடங்களில் இல்லாத அளவுக்கு விலைவாசி ஏறியுள்ளது.. அரசு வெளியிட்ட புள்ளி விவரம்
டெல்லி: சில்லறை பணவீக்க விகிதம் நவம்பரில் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டில் விலைவாசி உயர்வு கிடுகிடுவென உயர்ந்துள்ளது என்பதன் எதிரொலியாக இந்த புள்ளி விவரம் பார்க்கப்படுகிறது.
சில்லறை பணவீக்க விகிதம் 2016ம் ஆண்டு நவம்பருக்கு பிறகு, இப்போதுதான் மிக அதிகமாக உள்ளது. மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கான 4% என்பதை விட அதிகம்.
அக்டோபரில் சில்லறை பணவீக்கம் 4.62 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது அது 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. மறுபுறம், தொழில்துறை உற்பத்தி (ஐஐபி) அக்டோபரில் 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஐஐபி கடந்த ஆண்டு அக்டோபரில் 8.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. இப்போது மளமளவென சரிந்துள்ளது.
சாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மாஸ் லுக்.. அந்த க்யூட் சிரிப்பு வேறு
வியாழக்கிழமையான இன்று, அரசு வெளியிட்ட தரவுகளிலிருந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது. உற்பத்தித் துறை மந்தநிலையுடன், கடந்த அக்டோபரில் 2.1 சதவீதமாக சரிந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 8.2 சதவீத வளர்ச்சியிலிருந்து நேர் எதிர்மாறாகும். அக்டோபரில் மின் உற்பத்தி 12.2 சதவீதம் சரிந்தது, இது முந்தைய ஆண்டின் 10.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.
காய்கறிகளின் பணவீக்கம் அக்டோபரில் 26 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக உயர்ந்துள்ளது. வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக, சில்லறை பணவீக்க விகிதம் அதிகரித்து காணப்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.