காசை திருப்பி தரேன்.. என்னால வாங்குன ஓட்டை திருப்பி தாங்க.. பாஜகவை நெருக்கும் பிரபல பாடகர்
டெல்லி:பாஜகவுக்கு வாக்களிக்கக் கோரி பாடிய பாடலுக்காக நான் பெற்ற ஊதியத்தை திருப்பி தருகிறேன். அதுபோல என் பாடல் மூலம் பெற்ற வாக்குகளை நீங்கள் திரும்பி தாருங்கள் என்று அசாம் முதல்வருக்கு நூதன வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரபல பாடகர் ஜூபின் கார்க்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து 31, டிசம்பர் 2014-க்கு முன் இந்தியாவுக்குள் வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மைப் பிரிவினருக்கு குடியுரிமைத் தகுதி வழங்குகிறது குடியுரிமைச் சட்டம்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் மிக முக்கியமான பிரச்சினையாக கருதப்படுவது சட்டவிரோத குடியேறிகள் பிரச்சினை. 1951-ல் அசாமில் குடிமக்களையும் சட்டவிரோதக் குடியேறிகளையும் கண்டறியும் வகையில், பிரத்யேகமாக தேசியக் குடிமக்கள் பதிவேடு முறையை அரசு கொண்டுவந்தது.
பல கட்டங்களை கடந்து குடிமக்கள் சட்டம் 2003-ன்கீழ் என்ஆர்சி பட்டியலை புதுப்பிக்குமாறு அசாம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2015 முதல் நடந்துவந்த இந்தப் பணிகள், 2016 அசாம் சட்ட மன்றத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்த பின்னர் முழுவேகத்தில் முடுக்கிவிடப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்தின்போது, வங்கதேசத்தவர்கள் மூட்டை முடிச்சுடன் அசாமை விட்டுக் கிளம்புவார்கள் என்றும் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
சட்டவிரோத குடியேறிகள்
அதே நேரத்தில் அசாம், திரிபுரா மாநிலங்களில் சட்டவிரோத குடியேறிகள் பிரச்சினை காரணமாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அசாம் மாநில பிரபல பாடகரான ஜூபின் கார்க் இந்த சட்டத்துக்குத் தொடர்ந்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்.
முதல்வரும் கடிதம்
இது தொடர்பாக அண்மையில் அவர் அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவலுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்துக்கு இதுவரை பதில் ஏதும் வராததால் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் வாயிலாக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் தங்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், நீங்கள் அதற்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. அந்த அளவுக்கு நீங்கள் பரப்பாக இருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
நேரம் இல்லையா?
ஒரு வகையில் உங்களுக்குக் காட்டப்படும் கருப்புக் கொடிகளை எண்ணவே உங்களுக்கு நேரம் இல்லை என்பதையும் அறிவேன்.நான் எழுதிய கடிதத்தில் குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தக் கோரினேன்.
நடவடிக்கை எடுக்கவில்லை
ஆனால் நீங்கள் எவ்வித நடடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜகவுக்காக நான் பாடிய பாடல்களுக்கு நீங்கள் கொடுத்த ஊதியத்தைத் திருப்பி செலுத்திவிடுகிறேன். அதேபோல் நீங்களும் எனது பாடல் வாயிலாக பெற்ற வாக்குகளைத் திரும்பித் தந்துவிடுங்கள் என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.