இஸ்லாமிய பெண்ணை பைக்கில் அழைத்து சென்றவர் மீது தாக்குதல்.. இருவரை கைது செய்த போலீசார்
டெல்லி: பெங்களூரூவில் இஸ்லாமியப் பெண்ணை பைக்கில் அழைத்துச் சென்ற வங்கி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய இருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டெய்லி சர்க்கிள் பகுதியில் இஸ்லாமியப் பெண்ணை சக வங்கி ஊழியர் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.
'மாபெரும் சாதனை..' 3 நாள் ஸ்பேஸ் சுற்றுலா.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்
அப்போது, அவர்களை வழிமறித்த நபர்கள் இருவர், எதற்கு ஒன்றாகப் பயணம் செய்தீர்கள் எனக் கேட்டு மிரட்டியுள்ளனர். இஸ்லாமிய உடையை அணிந்திருந்த அப்பெண்ணிடம் ஏன் இஸ்லாமியர் அல்லாத ஒருவருடன் பயணம் செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளனர்.
தாக்குதல்
தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் அப்பெண் அது குறித்து விளக்கம் அளிக்க முயன்ற போதிலும், அதைக் காது கொடுத்துக் கேட்காத அந்த இருவர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இனி எந்த இஸ்லாமியப் பெண்ணையும் பைக்கில் அழைத்துச் செல்லக் கூடாது எனக்கூறி, அவர் அணிந்திருந்த ஹெல்மெட் மீது அடித்துள்ளனர்.
அத்துமீறல்
மேலும், "உன் பெயர் என்ன? உனக்கு வெட்கமாக இல்லையா? நாம் எந்த காலத்தில் வாழ்கிறோம் என உனக்குத் தெரியவில்லையா? நாய், பூனை போல் ஏன் நடந்து கொள்கிறீர்கள்?" எனப் பெண்ணை நோக்கி தாக்குதல் நடத்திய ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். அது மட்டுமின்றி, அப்பெண்ணின் கணவருக்கு போன் செய்து, இஸ்லாமியர் அல்லாத ஒருவருடன் பயணம் செய்ய ஏன் அனுமதித்தீர்கள் எனக் கேட்டுள்ளனர்.
வீடியோ வெளியீடு
உங்களைப் போன்ற ஒருவரால் தான் ஒட்டுமொத்த இஸ்லாமியச் சமுதாயத்திற்கே அவப்பெயர் எனக் கடுமையாகத் திட்டியுள்ளனர். ஹெல்மெட் அணிந்திருந்த அந்த நபரின் தலையிலும் பின்னர் கன்னத்தில் அறைந்துள்ளனர். இறுதியாக, பெண்ணை கட்டாயப்படுத்தி பைக்கில் இருந்து இறக்கிவிட்டு, பின்னர் ஆட்டோ ரிக்ஷாவில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களே இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளனர்.
உடனடி நடவடிக்கை
இந்த வீடியோ வைரலான நிலையில், எஸ் ஜி பாளைய காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தாக்குதல் நடத்திய இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து தென்கிழக்கு பெங்களூரு துணை காவல் ஆணையர் ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி கூறுகையில், "12 மணி நேரத்திற்குள் இருவரையும் கைது செய்துள்ளோம். இந்தச் சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார். மேலும், இந்தச் சம்பவத்தில் தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுத்த கர்நாடக காவல்துறைக்கு அம்மாநில முதல்வர் பொம்மை தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.