போராட்டம் நடத்துவது பயங்கரவாதம் இல்லை.. சிஏஏ போராட்டத்தில் கைதானவர்களுக்கு ஜாமீன்.. டெல்லி ஐகோர்ட்
டெல்லி: நாட்டில் அனைவருக்கும் போராட்டம் நடத்தும் உரிமையை உள்ளதாகத் தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், போராட்டம் நடத்துவது பயங்கரவாதம் இல்லை என்றும் போராடுபவர்கள் மீது கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வது பயங்கரவாதத்திற்கும், போராட்டம் நடத்தும் உரிமைக்கும் இடையே உள்ள இடைவெளியை இல்லாமல் செய்துவிடும் என்றும் தெரிவித்தனர்
மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற சிஏஏ போராட்டம் தொடர்பாக நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷப் டான்கா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பயங்கரவாதம் இல்லை
கடந்த ஆண்டு மே மாதம் இவர்கள் ஐவரும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஜாமீன் கோரி இவர்கள் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், " நாட்டில் உள்ள அனைவருக்கும் போராட்டம் நடத்தும் உரிமையை அரசியலமைப்பு வழங்கியுள்ளது. எனவே, போராட்டம் நடத்துவது பயங்கரவாதம் இல்லை என்பதை உணர வேண்டும்.
இடைவெளி இல்லாமல் போக்கிவிடும்
கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கும், போராட்டம் நடத்தும் உரிமைக்கும் இடையே உள்ள இடைவெளியை இல்லாமல் செய்துவிடும். போராட்டம் நடத்துபவர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைகள் என்பது ஜனநாயகத்திற்கே சோகமான ஒரு விஷயமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. அதேபோல முறையான சோதனைக்கு முன்னரே தடுப்பு காவல் என்பது ஒருவரை உளவியல் ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கும்.
வேறுபாடு உள்ளது
போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது, ஐபிசியின் கீழ் வரும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சர்வ சாதாரணமாகப் பயங்கரவாதச் சட்டம் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. போலீசாரின் பதிவு செய்துள்ள வழக்குகள் தெளிவானதாக இல்லை. பயங்கரவாத தடுப்பு சட்டங்களை நியாயமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அது போராட்டம் நடத்துபவர்களை அநியாயமாகத் தண்டிக்கப் பயன்படுத்தக் கூடாது" என்றனர்.
ஜாமீன் வழங்கி உத்தரவு
மேலும், சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஆஷப் டான்கா ஆகியோருக்கு 50 ஆயிரம் ரூபாய் தனிப்பட்ட பிணையுடன் ஜாமீன் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம் அவர்கள் பாஸ்போர்ட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஜாமீனில் வெளிவந்த பிறகு விசாரணையைத் தாமதப்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர்.