அன்னிய செலாவணி மோசடி வழக்கு.. ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்
டெல்லி: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
லண்டனில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா வீடு வாங்கியுள்ளார். அந்த வீடு சட்டவிரோத பணபரிமாற்றத்தின் கீழ் வாங்கியதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் அவரை கைது செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் 27-ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. அந்த கெடு முடிந்ததால் இந்த வழக்கு 28-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் இது தொடர்பாக எந்த முடிவையும் நீதிபதி அரவிந்த் குமார் மார்ச் 28-ஆம் தேதி எடுக்கவில்லை.
அதேசமயம் ராபர்ட் வதேராவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஏப்ரல் 1-ஆம் தேதி பிறப்பிப்பதாக கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி அரவிந்த்குமார், ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.மேலும் ரூ. 5 லட்சத்தை பிணைத்தொகையாக செலுத்தவும் உத்தரவிட்டார்.