விடாத விசாரணை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் 2வது நாளாக ராபர்ட் வத்ரா ஆஜர்
டெல்லி: பண மோசடி வழக்கிலும், சொத்து குவிப்பு வழக்கிலும் ராபர்ட் வத்ரா இன்று 2வது நாளாக அமலாக்கத்துறை முன் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா மீது லண்டனில் சொத்து குவித்ததாக புகார் இருக்கிறது. இந்த வழக்கில் இவர் தற்போது ஜாமீனில் இருக்கிறார். லண்டனில் 20 கோடி ரூபாய்க்கு முறைகேடாக நிலம் வாங்கியது.
இரண்டு புதிய வீடுகள் வாங்கியது மற்றும் புதிதாக நிறைய சொத்துக்களை வாங்கியது என்று அமலாக்குத்துறை வத்ரா மீது நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் நேற்று ராபர்ட் வத்ரா ஆஜரானார்.
இவர் வந்தார்
நேற்று இந்த வழக்கில் ஆஜராக ராபர்ட் வத்ரா மாலை 3 மணி அளவில் வந்தார். காலையில் இவர் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலைதான் ஆஜரானார். இவருடன் தற்போது தீவிர அரசியலில் குதித்து இருக்கும் இவரின் மனைவி பிரியங்கா காந்தியும் அலுவலக வாசல் வரை வந்தார்.
விசாரணை செய்தனர்
இவரிடம் நேற்று 6 மணி நேர விசாரணை நடந்தது. இரவு 9 மணி வரை இவர் விசாரிக்கப்பட்டார். 4 அமலாக்கத்துறை சிறப்பு உயரதிகாரிகள் இவரை விசாரித்ததாக கூறப்படுகிறது. இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல முக்கிய கேள்விகள்
லண்டனில் வாங்கிய நிலத்திற்கான மூலம் எப்படி கிடைத்தது, புதிய வீடு வாங்குவதற்கான வருமானம் எங்கிருந்து கிடைத்தது என்று பல கேள்விகள் இவரிடம் கேட்கப்பட்டு இருக்கிறது. இவரிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் இவர் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. நேற்று இவர் அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும் போது மணி இரவு 9.40.
|
மீண்டும்
இந்த நிலையில் இன்று ராபர்ட் வத்ரா இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். காலை 11.30 மணிக்கு இவர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தார். இன்னும் நிறைய கேள்விகள், சந்தேகங்கள் இருப்பதால் ராபர்ட் வத்ரா இன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கார்த்தி சிதம்பரமும், அமலாக்கத்துறையினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.