பரபரப்பு திருப்பம்.. என்.டி. திவாரியின் மகன் ரோஹித் கொலையா.. மனைவியிடம் விசாரணை
டெல்லி: உ.பி முன்னாள் முதல்வர் என்.டி திவாரியின் மகன் ரோஹித் திவாரி கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரது மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும் ஆந்திராவின் முன்னாள் ஆளுநருமான என்.டி திவாரியின் மகன் ரோஹித் திவாரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தார். அது கொலை என இப்போது தெரியவந்துள்ளது. இது குறித்து ரோஹித் திவாரியின் மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உத்திரப் பிரதேசத்தில் மூன்று முறை முதல்வராகவும் பின்னர் உத்தரகான்ட் மாநிலத்திலும் முதல்வராகவும் ஆந்திராவில் ஆளுநராகவும் சில முறை மத்திய அமைச்சராகவும் இருந்தவர் என்.டி திவாரி. இவர் ஆளுநராக இருந்தபோது இவர் மீது பல்வேறு பாலியல் குற்றசாட்டுகள் கூறப்பட்டன. அப்போது ரோஹித் என்பவர் என்.டி திவாரிதான் தனது தந்தை என கூறினார். இது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பின்னர் ரோஹித் என்.டி திவாரியின் மகன்தான் என்பதை மரபணு பரிசோதனை மூலம் நிரூபித்தார். அதன் பின்னர் ரோகித்தை ஏற்றுக் கொண்ட என்.டி திவாரி கடந்த வருடம் மறைந்தார். தனது தந்தை என்.டி திவாரிதான் என்பதை 6 ஆண்டுகள் போராடி நிருபித்த ரோஹித் தனது தாயாரை என்டி திவாரி திருமணம் செய்யவும் வைத்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரோஹித் திவாரி திடீரென மரணமடைந்தார். அப்போது அவர் நெஞ்சுவலி காரணமாக மரணம் அடைந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இருந்தாலும் அவர் மீது சில காயங்கள் இருந்ததால் அவரது மரணம் மீது சந்தேகம் இருந்தது. இதனால் பிரதேப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
பொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம்
பிரதேப் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தபோது அது இயற்கை மரணம் அல்ல என்றும் ரோஹித்தின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதால் அவர் மரணம் அடைந்துள்ளார் என்பதுவும் தெரிய வந்துள்ளது, ரோகித் திவாரி இறந்தபோது அவரது மனைவி அபூர்வா வீட்டில் இருந்துள்ளார். அவரோடு உறவினர் ஒருவரும் வீட்டில் இருந்துள்ளார். வீட்டுப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.
இதையடுத்து ரோஹித் இறந்தது எப்படி என்பது குறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் இறந்த நேரத்தில் வீட்டில் இருந்த ரோகித்தின் மனைவி மற்றும் உறவினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.