சார் ரொட்டி 3 ரூபாய்.. பிரியாணி 65 ரூபா.. சாப்டுங்க சார்... பார்லிமென்ட் கேன்டீனில் புது ரேட்!
புதுடெல்லி : பார்லிமென்ட் கேன்டீனில் எம்.பி.,க்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த உணவு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் உயர்த்தப்பட்ட உணவு விலை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் கேன்டீனில் எம்.பி.,க்கள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோருக்கு மானிய விலையில் உணவு வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 2016 ம் ஆண்டு முதல் மத்திய அரசும் பலமுறை சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் தற்போது தான் இந்த மானிய விலை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கடந்த வாரமே லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கூறி இருந்தார்.
இந்த வாரம் முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது. பெரும்பாலான உணவு பொருட்கள் மார்க்கெட் விலைக்கே விற்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுகளின் புதிய விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விலை விபரம் :
- ரொட்டி - ரூ.3
- ஐதராபாத் மட்டன் பிரியாணி - ரூ.65
- வேகவைக்கப்பட்ட காய்கறிகள் - ரூ.12
- சைவ உணவு - ரூ.100
- அசைவ உணவு பஃபட் உணவு : ரூ.700
- மட்டன் பிரியாணி - ரூ.150
இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மானியம் ரத்து செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்பட்ட விலையே இப்படினா...இதற்கு முன் மானியம் அளிக்கப்பட்ட போது இந்த உணவுகளின் விலை என்னவாக இருந்திருக்கும் என்பதே அனைவரும் கேட்கும் ஒரே கேள்வியாக உள்ளது.
லோக்சபா தலைமை செயலகத்திற்கு ஆண்டுக்கு செலவிடும் ரூ.8 கோடியை மிச்சப்படுத்தவே இந்த மானிய ரத்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. 2019 ம் ஆண்டு மட்டும் மானியவிலை உணவுக்காக ரூ.13 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையே விலை உயர்வு என்றால், இதை விட அதிகமான விலைக்கு விற்கப்படும் உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிடும் சாமானிய மக்களின் நிலையை என்னவென்று சொல்வது...