4 மாத குழந்தையின் பசியை போக்க, பாலுடன் ரயிலின் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர்
டெல்லி: ரயில் ஸ்டேசனில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த நிலையில், 4 மாத குழந்தையின் பசியை போக்க, ரயிலின் பின்னால் மின்னல் வேகத்தில் ஓடி பால் பாக்கெட்டை பெற்றோரிடம் வழங்கி இருக்கிறார் போலீஸ்காரர் ஒருவர். அவரை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் வெகுவாக பாராட்டியதுடன், சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Recommended Video
கர்நாடக மாநிலம் பெல்காமில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூருக்கு சிறப்பு ரயில் கடந்த மாத இறுதியில் புறப்பட்டு சென்றது. அந்த ரயிலில் ஹசீன் ஹாஷ்மி என்பவரும் அவரது மனைவி ஷரிஃப் ஹாஷ்மியும் தங்களது நான்கு மாத குழந்தையும் பயணித்துள்ளனர்.
ரயில் மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தை கடந்த 31ம் தேதி அடைந்தது. இதற்கிடையே ஷரிஃப் ஹாஷ்மியின் குழந்தை பாலுக்காக அழுதுகொண்டே இருந்தது. முன்னதாக பல்வேறு ரயில் நிலையங்களில் பால் வாங்க முயற்சித்துள்ளனர். ஆனால் பால் கிடைக்கவில்லை. இதனால் பசியால் குழந்தை அழுது கொண்டே இருந்தது.
குழந்தைக்கு பால் இல்லை
இந்நிலையில் போபால் ரயில் நிலையம் பெரியது மட்டுமின்றி அங்கு 10 நிமிடம் வரை நிற்கும் என்பதால் எப்படியாவது இங்கு பால் வாங்கிவிட வேண்டும் என்று தம்பதியினர் நினைத்திருந்தனர். ஆனால் ரயில் நிலையத்தில் அவர்களால் பால் வாங்க முடியவில்லை. ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து ஆர்பிஎஃப் போலீஸ்காரர் இந்தர் சிங் யாதவிடம், தனது குழந்தையின் நிலைமையை அவரது தாய் ஷரிஃப் ஹாஷ்மி கூறியுள்ளார். இதையடுத்து இந்தர் சிங் யாதவ் குழந்தைக்கு உடனடியாக பால் பாக்கெட் வாங்கி தர முடிவு செய்தார்.
ரயில் புறப்பட்டது
ரயில் நிலையத்திற்குள் பால் வாங்க முயற்சித்தார். ஆனால் அங்கு பால் இல்லை. இதனால் ரயில் நிலையத்தைவிட்டு வெளியில் சென்று பால் பாக்கெட் வாங்கி வந்தார். அவர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போது ரயில் புறப்பட்டுவிட்டது. ரயில் வேகமாக செல்ல தொடங்கிய நிலையில், இந்தர் சிங் யாதவ் மின்னல் வேகத்தில் ஓடி சென்று குழந்தையின் தாய் ஷரிஃப் ஹாஷ்மியிடம் பால் பாக்கெட்டை ஒப்படைத்தார். குழந்தையின் பெற்றோர் இந்தர் சிங் யாதவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள் பாராட்டு
இந்த காட்சி போபால் ரயில நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியது. ரயில்வே அதிகாரிகள், பொதுமக்கள் குழந்தையின் பசியை போக்கிய இந்தர்சிங் யாவை பாராட்டினர். இந்நிலையில் இந்த செய்தி அறிந்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இந்தர் சிங் யாதவை பாராட்டியதோடு, சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மின்னல் வேகம்
இச்சம்பவம் குறித்து இந்தர் சிங் யாதவ் கூறுகையில் ‘‘நான் 1வது பிளாட்பாரத்தில் வேலையில் இருந்தேன். அப்போது அந்த பெண் என்னிடம் ஓடி வந்து குழந்தைக்கு பால் இல்லை, வாங்கதருமாறு வேண்டினார். நான் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல், வெளியில் சென்று கடையில் பால் பாக்கெட் வாங்கி பிளாட்பாரத்திற்கு ஓடினேன். அப்போது ரயில் புறப்பட தொடங்கியது. மேலும் வேகமாக செல்லத் தொடங்கியது. இருப்பினும், நான் மின்னல் வேகத்தில் ஓடி ரயிலை துரத்தி பிடித்து பால் பாக்கெட்டை குழந்தையின் பெற்றோரிடம் சேர்த்துவிட்டேன்'' இவ்வாறு கூறினார்.