நிவர் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் மோடி நிவாரணம்
நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் பேரிடரால் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் மரக்காணம் புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. புயல் பாதிக்கும் பகுதிகளில் இருந்த மக்களை முகாம்களில் தங்க வைப்பது, முன்கூட்டியே மரங்களை வெட்டுவது, பேரிடர் மீட்புக் குழுவை வரவழைப்பது, நீர் வெளியேற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
நிவர் புயல் நிவாரணம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வர் அறிவிப்பு
நிவர் புயலினால் தமிழகத்திற்கு பெரிதாக பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதமைடைந்தன. கரும்புகள், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
இத போல புதுச்சேரி பலத்த பாதிப்புகளை சந்தித்தது. இதனால் 50 கோடி நிவாரணம் கோரி முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று இரவு 9 மணியளவில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
இதனைத் தொடர்ந்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார். மேலும் பேரிடரால் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.