தமிழகம் முதலிடம்... ரூ.227.93 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்
டெல்லி: நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3439.38 கோடி மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரைக்கும் ரூ.227.93 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வருகிற 19 ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்தநிலையில், அதிகபட்சமாக பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தமிழகத்தில் 25.5 கோடி பணமும் ரூ. 51. 83 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. மேற்குவங்க மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டதால் நேற்று இரவு 10 மணியுடன் பிரச்சாரம் முடிந்தது.
இதற்கிடையே, 4 தொகுதி இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, காணொலி காட்சி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.