ஆங்கிலேயர்களை ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆதரித்தது.. அதிரடி காட்டும் பிரியங்கா காந்தி!
டெல்லி: ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒற்றுமையாக போராடியபோது, அந்த போராட்டத்தை கைவிடுமாறு ஆர்எஸ்எஸ் இயக்கம் வேண்டுகோள் விடுத்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை மக்கள் அனைவரும் தங்கள் சமூக ஊடக கணக்கின் முகப்பு புகைப்படத்தை தேசியக்கொடியை வைக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி அவரும், பாஜக தலைவர்களும் தங்கள் சமூக ஊடக கணக்கு பக்கங்களின் முகப்பு படங்களை மாற்றி வருகின்றனர்.
சங்கரன் கோவில் ஆடித்தபசு விழா கோலாகலம்..கோமதி அம்மனை தரிசனம் செய்தால் இத்தனை நன்மைகளா?
காங்கிரஸ் விமர்சனம்
அதேபோல் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கேற்ப பாஜகவினர் தொடர் பரப்புரையை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே சுதந்திர தினம் குறித்து காங்கிரஸ் - பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆர்எஸ்எஸ் மீது காங்கிரஸ் கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
சோனியா காந்தி
இந்த நிலையில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டதன் 80வது ஆண்டு விழா கடைபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நாம் நினைவுகூரும்போது, இந்திய சுதந்திரத்துக்காக லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் கொடுத்த விலையை மறக்கக்கூடாது.
நமது பலத்துடன் சுதந்திரத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம். இந்த நாளில், அருணாஆசிப் அலி தேசியக் கொடி ஏற்றினார். அவரது துணிச்சல்தான், சுதந்திர வேட்கையின் அடையாளம் என்று தெரிவித்தார்.
பிரியங்கா காந்தி
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒற்றுமையாக போராடியபோது, அந்த போராட்டத்தை கைவிடுமாறு ஆர்எஸ்எஸ் இயக்கம் வேண்டுகோள் விடுத்தது. கொடிய அடக்குமுறைக்கு இடையே ஆங்கிலேயர்களை ஆதரித்தது.
அனைத்து சாதி, மதம், இனத்தை சேர்ந்தவர்களும் 'வெள்ளையனே வெளியேறு' என்று ஒன்றுபட்டு குரல் கொடுத்தனர். இந்தப் போராட்டம் தொடங்கியவுடன், காந்தி, நேரு, படேல், மவுலானா அபுல்கலம் ஆசாத், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் அலுவலகங்கள் இடிக்கப்பட்டன.
போர்க்குரல்
ஆனால், 'வெள்ளையனே வெளியேறு' என்று ஒட்டுமொத்த மக்களும் எழுப்பிய போர்க்குரல், வெள்ளையர்களை விரட்டியடித்தது. இந்தியா சுதந்திரம் பெற்றது என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் சுதந்திர தினம் மற்றும் தேசியக் கொடி விவகாரங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.