இட ஒதுக்கீடு பற்றி ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விடாப்பிடி
டெல்லி: இட ஒதுக்கீடு தொடர்பாக ஆரோக்கியமான விவாதம் தேவை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று, ஏற்கனவே, மோகன் பகவத் தெரிவித்திருந்தார். இதற்கு பல எதிர்க்கட்சிகளும், ஜாதி அமைப்புகளும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், கயான் உற்சவம் நிறைவு விழாவில் மீண்டும், அதுகுறித்து பேசியுள்ளார் மோகன் பகவத். அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பாருங்கள்:
இதற்கு முன்பும், நான் இட ஒதுக்கீடு குறித்து பேசினேன். ஆனால் அது நிறைய சத்தங்களை உருவாக்கியது. முழு விவாதமும் உண்மையான பிரச்சினையிலிருந்து திசை திருப்பப்பட்டது. இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் அதற்கு எதிரானவர்களின் நலன்களை மனதில் கொண்டு பேச வேண்டும். அதேபோல் அதை எதிர்ப்பவர்களும் இதற்கு நேர்மாறாக செய்ய வேண்டும்.
இடஒதுக்கீடு குறித்த கலந்துரையாடல் ஒவ்வொரு முறையும் கடுமையான செயல்களையும், எதிர்விளைவுகளையும் உருவாக்குகிறது. அதேசமயம் இந்த அணுகுமுறையில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் நல்லிணக்கம் தேவை. ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைமையிலான அரசு ஆகியவை வெவ்வேறு அமைப்புகளாக செயல்படுகின்றன. ஒருவர் செயல்பாட்டுக்கு மற்றொருவர் பொறுப்பேற்க முடியாது.
காஷ்மீர் விஷயத்தில் மூக்கை நுழைத்த சீனா மூக்கை உடைத்த ஹாங்காங்.. 17 லட்சம் பேர் வீதிகளில் இறங்கினர்
பாஜக மற்றும் இந்த அரசில் சங் அமைப்பினர் பரவலாக இருப்பதால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைகளை கேட்பது வழக்கம். ஆனால் அவர்கள் எங்களுடன் உடன்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை.
பாஜக இப்போது அரசாட்சியில் இருப்பதால், அனைத்தையும் யோசித்து பார்க்க வேண்டும், ஆர்எஸ்எஸ் கண்ணோட்டத்துடன் அனைத்து விஷயங்களிலும் உடன்பட முடியாது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், அந்த அரசு தேசிய அளவில் அனைத்தையும் யோசிக்க வேண்டியுள்ளதாகியுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.