ஆர்எஸ்எஸ் முன்வைத்த திட்டங்கள்.. அப்படியே பிரதிபலித்த புதிய கல்வி கொள்கை..அடுத்த டார்கெட் சிலபஸ்!
டெல்லி: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், கல்வி கொள்கை தொடர்பாக முன்வைத்த கருத்துகளை அப்படியே ஏற்று புதிய கல்விக் கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பாடத் திட்டங்களில் எவை இல்லாம் இருக்க வேண்டும் என்கிற அடுத்த அஜெண்டாவையும் கையில் எடுத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
Recommended Video
34 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கையானது 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது மத்திய அரசின் கருத்து. ஆனால் பல்வேறு மாநிலங்கள் குறிப்பாக தமிழகத்தில் இந்த புதிய கல்வி கொள்கைக்கு மிகக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
புதிய கல்வி கொள்கையில் 3-ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு, மும்மொழி பாடக் கல்வி, பட்டபடிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு, 6-ம் வகுப்பு முதலே கைத்தொழில் கல்வி என்கிற அம்சங்களை முன்வைத்து தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் புதிய கல்வி கொள்கையின் மூலம் தாங்கள் நினைத்ததை சாதித்துவிட்டதாக பெருமிதப்படுகிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். இதனாலே குதூகலத்தை காட்டி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
முதிர்ச்சியின்மை... விரக்தி... யோகா பண்ணுங்க - கேஎஸ் அழகிரி போட்ட ட்வீட் யாருக்காக?
ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைகள் ஏற்பு
புதிய கல்வி கொள்கை வரைவு தொடர்பாக கடந்த ஆண்டு பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டிருந்தது மத்திய அரசு. இதனடிப்படையில் நாடு முழுவதும் ஆலோசனைகளும் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இந்த ஆலோசனைகள் அத்தனையுமே நிராகரிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகள் ஒரு கல்விக் கொள்கை எப்படியானதாக இருக்க வேண்டும் என முன்வைத்த அம்சங்களை அப்படியே ஏற்று புதிய கல்வி கொள்கையாகவே அறிவித்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிற்து.
கருத்து கேட்ட பரிவார அமைப்புகள்
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பு அமைப்புகளான பாரதீய ஷிக்ஷான் மண்டல்- BSM, ஷிக்ஷா சம்ஸ்க்ருத உத்தான் நியாஸ்-SSUN, பாரதீய பாஷா மஞ்ச் ஆகியவை புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்தின. நாடு முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட பெரிய கருத்தரங்குகளை நடத்தி 6,000-க்கும் அதிகமான கல்வியாளர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்களை பங்கேற்க வைத்து புதிய கல்வி கொள்கை குறித்த புரிதலை ஏற்படுத்தினர்.
கை கோர்த்து ஆலோசனை
பாஜக ஆளும் மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகளுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை- தற்போது கல்வி அமைச்சர் பொக்ரியாலும், முந்தைய அமைச்சர் ஜவடேகரும் தொடர்ச்சியான ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பரிவார அமைப்புகள் புதிய கல்வி கொள்கை தொடர்பான சுப்பிரமணியன் கமிட்டி, கஸ்தூரி ரங்கன் கமிட்டி ஆகியவற்றிடம் தங்களது பரிந்துரைகளை கொடுத்தனர். இதனைத்தான் தற்போது மத்திய பாஜக அரசும் அச்சு பிசகாமல் ஏற்று புதிய கல்வி கொள்கையை கொண்டுவந்துவிட்டோம் என பிரகடனம் செய்திருக்கிறது.
கல்வி அமைச்சகம்
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் என்பது ராஜீவ் காந்தி காலத்தில் சூட்டப்பட்ட பெயர். அப்போதைய சோவியத் யூனியன் பாணியில் இந்த பெயரிடப்பட்டது. இதனை கல்வி அமைச்சகமாக மாற்ற வேண்டும் என்பதும் ஆர்.எஸ்.எஸ். நீண்டகால வலியுறுத்தல். தற்போதைய மோடி அரசு எந்த ஒரு தடங்கலும் இடைஞ்சலும் இன்றி இதனை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டிவிட்டது. 2018-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பாரதீய ஷிக்ஷான் மண்டல்- BSM -ன் கருத்தரங்குகள், மாநாடுகளில் இதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன - தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர் மோடி, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஜவடேகர் முன்னிலையிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ்-ன் மும்மொழி கொள்கை
தற்போதைய புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கல்வி கொள்கை பிரதான அம்சமாக உள்ளது. இதுவும் ஆர்.எஸ்.எஸ்.-ன் நீண்டகால கோரிக்கை. குறிப்பாக சமஸ்கிருதத்தை முன்னிறுத்தி, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான மும்மொழிக் கொள்கையைத்தான் தற்போதைய மோடி அரசு புதிய கல்வி கொள்கையில் இடம்பெறச் செய்திருக்கிறது. இது அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா என்பதை நாடு நன்கறியும். இது தொடர்பாக ஷிக்ஷா சம்ஸ்க்ருத உத்தான் நியாஸ்-ன் தேசிய செயலாளர் அதுல் கோத்தாரி கூறுகையில், கலாசாரம், பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவை பாடப் புத்தகங்களில் ஒரு இணைப்பு திட்டமாக இருந்தன. இந்த அடிப்படையையே மாற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கம். மாரல் வேல்யூஸ் எனப்படும் நன்னெறி கற்பித்தல்களை அடிப்படையாக இல்லாமலே ஒரு கல்வி முறை இருத்தல் சரியானது அல்ல.
உரிமைகள் ப்ளஸ் கடமைகள்
மாணவர்களுக்கு அடிப்படை உரிமைகள் குறித்து மட்டும் பாடம் எடுத்தால் போதாது; ஒரு குடிமகனாக இந்த தேசத்துக்கான அடிப்படை கடமைகள் எதை செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தர வேண்டியதும் கல்விக் கொள்கையின் அம்சம். இதை நமது புராணங்கள், இதிகாசங்கள், கலாசார நடவடிக்கைகள் மூலமாகத்தான் மாணவர்களிடம் சேர்ப்பிக்க முடியும் என்கிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் vision and mission என்ற தலைப்பில் கல்வி பற்றி கூறப்பட்டுள்ளதை பிரதிபலிக்கும் வகையில்தான் புதிய கல்வி கொள்கையின் பல்வேறு அம்சங்களும் இருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மையும் கூட.
டார்கெட் சிலபஸ்
இதனையடுத்து பாடப் புத்தகங்கள் எப்படியானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மத்திய அரசிடம் கொடுத்திருக்கிறது. தற்போதைய பாடத் திட்டத்தில் இருந்து எது எல்லாம் நீக்கப்பட வேண்டும்; அதற்குப் பதிலாக எவற்றையெல்லாம் சேர்க்க வேண்டும் என்கிற மிக நீண்டபட்டியலை மத்திய அரசிடம் ஆர்.எஸ்.எஸ். கொடுத்திருக்கிறது. இனிவரும் பாடப் புத்தகங்களும் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவின் அடிப்படையில்தான் இருக்கும். அதையே வருங்கால தலைமுறைகள் படித்தும் ஆக வேண்டும் என்பதே இந்திய யதார்த்த சூழலாகும்.