கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கிறதா 'ஒரே தேசம்- ஒரே தேர்தல்' முழக்கம்?
டெல்லி: லோக்சபாவுக்கும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய பாஜக அரசின் திட்டமானது கூட்டாட்சி தத்துவத்துக்கே வேட்டு வைப்பதாகும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்துராஷ்டிரத்தை அமைப்பதுதான் பாஜகவின் இந்துத்துவா கொள்கை. ஆனால் பல்வேறு இனங்கள், மதங்கள், மொழிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிற தேசமாக இந்தியா இருந்து வருகிறது. இங்கு பொதுசிவில் சட்டம், ஒற்றையாட்சி போன்ற வலதுசாரி சித்தாந்தங்களை எளிதில் திணித்துவிட முடியாது.
இந்த பட்டியலில்தான் ஒரே தேசம்.. ஒரே தேர்தல் என்கிற முழக்கமும் இடம்பெறுகிறது. ஒவ்வொரு மாநில சட்டசபைகளின் பதவி காலமும் வெவ்வேறானவை. அவை அனைத்துக்கும் லோக்சபா தேர்தலுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமற்றது.
5 ஆண்டுகளாக ஜனாதிபதி ஆட்சி?
மாநிலங்களில் ஆளும் அரசு பதவி ஏற்ற சில நாட்களிலேயே கூட பெரும்பான்மையை இழக்க நேர்ந்து அரசு கவிழலாம். அதிகபட்சம் 6 மாதம் ஜனாபதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு மீண்டும் தேர்தலை நடத்தித்தான் ஆக வேண்டும். 5 ஆண்டுகாலத்துக்கும் ஜனாதிபதி ஆட்சியே அமலில் இருக்கும் நிலை என்பது அந்த மாநிலத்தின் உரிமையை கபளீகரம் செய்வது என்பதாகிவிடும்.
மாநிலங்களை கட்டுப்படுத்தும் பாஜக
பாஜகவின் திட்டமே அனைத்து மாநில அரசுகளையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு சர்வாதிகாரப் போக்காகவே இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக அரசு செயல்பட்டாலும் மத்திய அரசு நினைக்கிற கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அத்தனை நாசகார திட்டங்களையும் மக்கள் மீது திணிக்கிறது.
இந்துராஷ்டிராவை நோக்கி
இதே போக்குதான் நாடு முழுவதும் விரிவடையும் அபாயம் இருக்கிறது. பாஜகவின் கொள்கை அஜெண்டாவான இந்துராஷ்டிரத்தை நோக்கிய முதல் நகர்வாகத்தான் ஒரே தேசம்.. ஒரே தேர்தல் எனும் முழக்கம் இருக்கப் போகிறது. ஏற்கனவே அரசியல் சாசன அமைப்புகளை ஒரு பழிவாங்கும் கருவிகளாக உருவாக்கி வைத்துவிட்டனர்.
மொழிப்போர்கள் காத்திருக்கிறது..
இதன் உச்சமாக, உச்சநீதிமன்றமே அதிகார மோதல்களுக்கு உள்ளாகிப் போனது, காலங்கள் மாற மாற ஜனநாயகத்தில் நெகிழ்வுத் தன்மைதான் தேவை. பல தேசிய இனங்கள், பண்பாடுகள், மொழிகள் மீதான ஒரு கூட்டமைப்பாகத்தான் இந்தியா இருந்து வருகிறது. ஒரு தேசிய இனத்தை, மொழியை சிறுமைப்படுத்தி மற்றொரு மொழியையை பண்பாட்டை திணித்தால் இங்கு மொழிப்போர்கள்தான் வெடிக்கும்.
மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம்
ஒரு இனத்தின் அடையாளங்களை தடை செய்தால் அது ஜல்லிக்கட்டுப் புரட்சியாகத்தான் வெடிக்கும். இத்தகைய படிப்பினைகள் மூலம் மாநிலங்களுக்கான உரிமைகளை அதிகமாக்கி இந்திய கூட்டமைப்பை வலுவானதாக்க வேண்டும். இதற்கு நேர் எதிராக, ஒற்றை தேசம்.. ஒரே தேர்தல் என முழங்கினால் அல்லது அதை அமல்படுத்த முனைந்தால் இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கே பெருங்கேடாக வேட்டு வைக்கும் செயலாகிவிடும் என்பதே அரசியல்பார்வையாளர்கள் கருத்து.