2025ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டப்படும்.. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஆர்எஸ்எஸ்
டெல்லி:2025ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு விடும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் நிச்சயம் ராமர் கோயில் கட்டப்பட்டுவிடும் என்று அனைத்து தரப்பினராலும் கூறப்பட்டு வந்தது. அதற்கான நடவடிக்கைகளை விரைவில் தொடங்குமாறும் ஆர்எஸ்எஸ் பாஜகவையும், மத்திய அரசையும் வலியுறுத்தி வந்தது.
ராமர் பெயரைச் சொல்லித்தானே மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவரைப் பொருத்தவரை சட்டத்தைக் காட்டிலும் கடவுள் ராமர் பெரிதாகத் தெரிய வில்லை. எங்களுடைய கேள்வி , பெரும்பான்மை உள்ள பாஜக ஆட்சியில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால் பின்னர் எப்போது கோயில் கட்டுவது என்று அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் சிவசேனா அமைப்பும் கட்டுரை தீட்டியது.
மத நம்பிக்கை தொடர்பான விவகாரம் என்பதால் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பும் கூறி வந்தது. அதை வலியுறுத்தும் விதமாக, பிராக்யராஜில் வரும் 31ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி தர்ம சன்சாத் மாநாடு ஒன்றையும் விஹெச்பி நடத்துகிறது.
இந் நிலையில், 2025ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டு விடும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி கூறியுள்ளார். முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
அவர் கூறியதாவது:2025ம் ஆண்டு ராமர்கோயில் கட்டுமான பணிகள் தொடங்கும். அப்போதுதான் நாடு வளம் பெறும். 1952ம் ஆண்டு சோம்நாத் கோயில் கட்டப்பட்ட பின்னர் குஜராத் மாநிலம் பொலிவு பெற்றது. அதே போன்று தான் ராமர் கோயில் கட்டப்பட்டால் தான் நாடு வளம் பெறும் என்று அவர் பேசினார்.
அவரின் பேச்சை தொடர்ந்து, 2025ம் ஆண்டு தான் ராமர்கோயில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று அவர் கூறியதாக கருத்துகள் வெளியாகின. அதுவரை நீதிமன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடும் என்ற கருத்துகளும் பரவின.
ஆனால், பையாஜி ஜோஷியின் கருத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைமையகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதாவது, 2025ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்றும், 2025ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்குவது போன்று கூறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இதன் மூலம்.. ஆளும் மத்திய அரசுக்கு ராமர் கோயில் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் கடுமையான நெருக்கடியை கொடுக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.