அமித் ஷா போட்ட ஒரு போன் கால்.. அதிகரித்த பலம்.. ஆர்டிஜ மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறுவது உறுதி
டெல்லி: லோக்சபாவில் ஆர்டிஐ மசோதா நிறைவேறிவிட்ட நிலையில், அமித் ஷாவின் சாமார்த்தியமான ஒரு போன் காலால் ராஜ்யசபாவிலும் இந்த மசோதா நிறைவேறப்போகிறது.
மத்திய அரசு பண மசோதாக்களை தவிர, என்ன சட்ட மசோதாக்கள் கொண்டுவந்தாலும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இரண்டிலும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அது சட்ட அங்கீகாரத்தை பெறும்.
இதன்படி அதிக உறுப்பினர்கள் உள்ளதால் எந்த சட்டத்தையும் லோக்சபாவில் மோடி அரசால் நிறைவேற்ற முடிகிறது. என்ன தான் எதிர்க்கட்சிகள் ஆவேச குரல் எழுப்பினாலும் பலன் இருப்பதில்லை.
'உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை'..... முதல் நாளிலேயே ஸ்மிருதி இரானியுடன் வைகோ மல்லுக்கட்டு
எதிர்க்கட்சிகள் ஆதரவு
ஆனால் அதேநேரம் ராஜ்யசபாவில் அந்த மசோதாக்களை நிறைவேற்ற முடிவதில்லை. அங்கு எதிர்க்கட்சிகளின் கோரிக்களுக்கு செவி சாய்த்து சட்டத்தின் சரத்துகளில் தேவையான மாற்றங்கள் செய்தால் மட்டுமே நிறைவேறும். இதனால் அரசின் பல்வேறு மசோதக்கள் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஐ மசோதா நிறைவேறுமா
இந்த சூழலில் தகவல் அறியும் உரிமைச் சட்ட திருத்த மசோதாவை (ஆர்டிஐ) அண்மையில் லோக்சபாவில் மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் ராஜ்யசபாவில் நிறைவேற்ற வேண்டுமென்றால் போதிய ஆதரவு வேண்டும். தற்போதைய நிலையில் 6 உறுப்பினர்கள் பலம் பாஜக கூட்டணிக்கு ராஜ்யசபாவில் குறைவாக உள்ளது.
ஒகே சொன்ன கேசிஆர்
இதனால் ஆர்டிஐ மசோதா நிறைவேறுதில் சிக்கல் இருந்தது. முதலில் எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் ஒடிசாவின் பிஜேடி கட்சி ஆகியவை தற்போது ஆர்டிஐ மசோதாவுக்கு ஆதரவு தர முன்வந்துள்ளன. முன்னதாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆர்டிஐ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்க்கு போன் கால் செய்து ஆதரவு கேட்டார். இதையடுத்து ஆர்டிஐ மசோதாவை ஆதரிப்பதாக சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.
ஆர்டிஐ மசோதா நிறைவேறும்
இதேபோல் ஒடிசாவின் பிஜேடி கட்சியும் ஆதரவு தர முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் எம்பி பிரசன்னா ஆச்சர்யா கூறுகையில், எங்கள் கேள்விகளையும் கவலைகளையும் அரசிடம் கூறுவோம், அவர்கள் பதில் திருப்தி அளித்தால் நாங்கள் மசோதாவை ஆதரிப்போம் என்றார். இதனால் ராஜ்யசபாவிலும் ஆர்டிஐ மசோதா நிறைவேறுவது உறுதியாகி உள்ளது . இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய மாநில தகவல் ஆணையர்களின் பதவி காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்படும். அவர்களின் ஊதியம் உள்பட விவகாரங்கள் மத்திய அரசின் அதிகாரத்துக்குள் வந்துவிடும்.