ரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா?
டெல்லி: அமெரிக்க டாலருக்கு, எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில், 28 பைசா சரிவை சந்தித்து, 71.88 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்து வருவது, சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனம் மீது ட்ரோன் மூலம், தாக்குதல் நடத்தப்பட்டதும் இதற்கு காரணங்களாகும்.
சவுதி அரேபியா தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணை விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. எனவே அமெரிக்க டாலர் போன்ற பாதுகாப்பான புகலிடங்களை நோக்கி முதலீட்டாளர்கள் ஓடத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்
பிரச்சினைகள்
"சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் தொழிற்சாலை மீதான சமீபத்திய தாக்குதல்கள் கச்சா எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. விரைவில் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படாவிட்டால், இதுபோன்ற உயர்வு உலகளாவிய பொருளாதாரத்தை பாதிக்கும், ஏனெனில் நுகர்வோர் செலவுகள் அதிகரிக்கும். இது நிச்சயமாக இந்தியாவை பாதிக்கும். ஏற்கனவே இந்தியாவில், பொருளாதாரம் சரிவடைந்துவருவதால் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும்," என்று அமெரிக்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த வர்த்தக நிதி நிறுவனமான டிரிப் கேப்பிட்டலின் இணை நிறுவனரும் இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான புஷ்கர் முகேவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ யிடம் தெரிவித்தார். ரூபாய் மதிப்பு சரிந்தால் உள்நாடு மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் எந்த மாதிரியான பாதிப்பை சந்திப்பார்கள் என்பது குறித்து இதோ பாருங்கள்.
வெளிநாட்டுக் கல்வி
பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வெளிநாட்டுக் கல்வியை முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட் ரெடி செய்திருப்பார்கள். ஆனால் ரூபாய் மதிப்பின் சரிவு மாணவர்களின் வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் ஸ்பான்சர்களை பாதிக்கும். ரூபாய் வீழ்ச்சியால் மாணவர்கள் ஒவ்வொரு டாலருக்கும் அதிக ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, ஒருவர் 2017 இல் சராசரியாக ஒரு டாலருக்கு ரூ .65 செலவிட்டிருந்தால், அவர்கள் இப்போது ரூ .71.5 ஐ வழங்க வேண்டும். இது 10 சதவிகித அதிகரிப்பு. வெளிநாட்டுக் கல்வியைப் பொறுத்தவரை இது கணிசமான பெரிய தொகையாகும். உங்கள் கல்வி கட்டணம் முதல் உங்கள் போர்டிங், உணவு மற்றும் பயணச் செலவுகள் வரை அனைத்தும் இதனால் உயரும்.
வெளிநாட்டு பயணம்
ஏற்கனவே அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு விடுமுறையை கொண்டாட செல்ல திட்டமிட்டிருந்தால், ரூபாய் வீழ்ச்சியால் நீங்களும் பாதிக்கப்படுவீர்கள். உணவகங்கள், தங்கும் ஹோட்டல்கள், ரயில் / பஸ் / வாகன சவாரிகள், ஷாப்பிங் போன்றவற்றிற்கு, அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் ரொம்பவே இறுக்கிப் பிடித்து பட்ஜெட் போட்டு வைத்திருந்தால், உங்கள் பட்டியலில் சில இடங்களை நீங்கள் நீக்க வேண்டியிருக்கும். உங்கள் ஷாப்பிங் பட்டியலில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டி வரும். ரூபாய் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், உங்கள் தங்குமிடத்தையும் மாற்ற வேண்டியிருக்கும். இதுவரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யாதவர்களுக்கு, இன்னும் அதிக செலவு கேரண்டி.
பணவீக்கம்
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நேரடியாக எரிபொருள் விலையை கணிசமாக உயர்த்த காரணமாகிவிடும். இது உற்பத்தி பொருட்கள் அல்லது விவசாய பொருட்கள் போன்ற அன்றாட நுகர்வு பொருட்களின் விலைகளின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எரிபொருள் விலைகள்
ரூபாய் வீழ்ச்சி எரிபொருள் விலையை உயர்த்துகிறது, ஏனெனில் இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்து பெறுகிறது. ரூபாய் தொடர்ச்சியாக சரிவதால், எரிபொருள் விலை உயரக்கூடும். இது உங்கள் பயணம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை விலை உயர்ந்ததாக மாற்றும்.
கார்கள், மடிக்கணினிகள்
நிறைய ஆட்டோமொபைல் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன, இறக்குமதி செலவு அதிகரிக்கும் போது, ஆட்டோமொபைலின் விலையும் உயர்கிறது. நீங்கள் ஒரு கார் வாங்க திட்டமிட்டால், அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். மடிக்கணினி மற்றும் கம்ப்யூட்டர் உபகரணங்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதி செலவு அதிகரிப்பால், அவற்றின் விலைகள் உயரும். டி.வி பேனல்கள் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் டிவிக்கள் குறிப்பாக எல்.ஈ.டிகளும் விலை உயர்ந்ததாக மாறும்.