தமிழ் உட்பட 13 மொழிகளில் வங்கி தேர்வு.. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை
டெல்லி: நாட்டில் இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் வங்கி பணியாளர்களுக்கான தேர்வுகளை எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS)சார்பில் நடத்தப்படும் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாது 13 மாநில மொழிகளில் இனி எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கேல் 1 நிலையிலான பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 3, 4 மற்றும் 11ம் தேதிகளிலும், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 17, 18 மற்றும் 25ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு வங்கிபணியாளர்கள் தேர்வு நிறுவனம், முதனிலை, மெயின், நேர்காணல் முறைகளில் பணியாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் 2020 ஜனவரிக்குள் இந்த பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களவையில் நடப்பு நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டிற்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை,நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார் அப்போது பேசிய அவர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி நாடு முழுவதிலுமுள்ள மண்டல மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளுக்கு ஒன்றாம் நிலை அலுவலர்கள் மற்றும் பல்வகை பணி ஊழியர்களுக்கான தேர்வு இனி தமிழ், மலையாளம், அசாமி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, ஒடியா, மணிப்பூரி, மராத்தி ,பஞ்சாபி, உருது கொங்கனி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய அமைச்சர், ஒரு மாநிலத்தில் அல்லது அந்த மண்டலத்தின் சொந்த மொழி அறிவால் பணியாளர்கள் தங்கள் கடமையை திறமையாக செய்ய முடியும்.
எனவே உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் விதமாக, வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் நடத்தும் தேர்வுகளை 13 பிராந்தி மொழிகளில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். நடப்பாண்டு முதலே இத்திட்டம் அமலுக்கு வருவதாகவும் அறிவித்தார்.
13 மாநில மொழிகளுடன் வழக்கம் போல கூடவே இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் தேர்வர்கள் தேர்வு எழுதி கொள்ளலாம் என்றார். இந்த அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டவுடன் மக்களவை உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.