சீனாவின் பிடியில் இந்திய வீரர்கள்...மத்தியஸ்தம் செய்த ரஷ்யா... ஒதுக்கப்பட்ட அமெரிக்கா!!
டெல்லி: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் சிக்கல் தீருவதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காரணம் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதற்கு முன்னதாக இந்தியாவுக்கு ஆதரவாக சீனாவிடம் பேசி 10 இந்திய ராணுவ வீரர்களை விடுவிக்க ரஷ்யா உதவியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கல்வான் பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டனர். 10 வீரர்களை சீனா சிறை பிடித்தது என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டது. பதட்டத்தை தணிக்க ரஷ்யா இருநாடுகளுடன் இணைந்து ஜூன் 23ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
எல்லையில் பதட்டத்தை தணிப்பது, சிறை பிடித்த இந்திய ராணுவ வீரர்களை விடுவிப்பது என்பது கூட்டத்தின் முக்கிய அம்சங்களாக பேசப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ரஷ்யா பங்கெடுத்து வீரர்களை விடுவிக்க பெரிய அளவில் உதவியதாக கூறப்படுகிறது.
உலக அளவில் இருக்கும் தன்னுடைய அலுவலகங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, பல வகைகளில் முயற்சித்து ரஷ்யா பதட்டத்தை தணிக்க உதவியுள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை சர்ச்சைகள் அல்லது மற்ற விவகாரங்களில் தலையிடாமல், தற்போது ஏற்பட்டு இருந்த பதட்டத்தை மட்டும் தணிக்க ரஷ்யா முன் வந்தது என்ற தகவல்கள் கூறுகின்றன. இந்தியா, சீனா இரண்டு நாடுகளுக்கும் ரஷ்யா நட்பு நாடாக இருப்பதால், இந்த முயற்சியை மேற்கொண்டு இருந்தது என்று கூறப்படுகிறது.
இந்தியா விரும்பினால் அமெரிக்கா தலையிடும் என்று கூறிய நிலையிலும், ராஜாங்க அளவில் பல ஆண்டுகளாக நட்புடன் இருக்கும் ரஷ்யாவை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம், சீனாவுக்கும் நட்பு நாடாக ரஷ்யா இருந்ததுதான், பேச்சுவார்த்தையும் எளிமையாக இருந்துள்ளது.
கடந்த ஜூன் 15ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்த ரஷ்ய வெளியுறவுத்துறை மற்றும் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர், ''இந்திய, சீன எல்லையில் நடக்கும் பதட்டத்தை கண்காணித்து வருகிறோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
சீனா ஆதிக்கம் செய்ய விடமாட்டோம்.. இந்தியாவுக்கு அமெரிக்க ராணுவம் துணை நிற்கும்- வெள்ளை மாளிகை அதிரடி
இந்த மூன்று நாடுகளின் கூட்டத்திற்குப் பின்னர், வெள்ளிக்கிழமை பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்று இருக்கும் ஐந்து நாடுகள் பங்கேற்ற கூட்டமும் நடந்ததாக கூறப்படுகிறது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. மீண்டும் இந்த நாடுகளின் கூட்டம் நடப்பாண்டு இறுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த கூட்டத்தில், கொரோனா குறித்து ஐந்து நாடுகளும் விவாதித்தாக கூறப்படுகிறது.