இந்தியா புறக்கணிப்பா...சீனாவுடன் கைக்கோர்த்த ரஷ்யா...நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு!!
டெல்லி: இந்தியாவும், ரஷ்யாவும் கடந்த 1970களில் இருந்து ராஜ தந்திர ரீதியில் கூட்டு அமைத்து இருந்தனர். ஆனால், தற்போது இந்த உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் ரஷ்யாவுடன் சீனாவும், பாகிஸ்தானும் நட்புறவு பாராட்டுவதுதான். சீனாவுடன் இணைந்து ரஷ்யா தற்போது நீர்மூழ்கிக் கப்பல்கள் வடிவமைத்து வருவது இந்தியாவை இந்த கூட்டில் இருந்து விலகச் செய்துள்ளது.
இதுமட்டுமில்லை, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் ஆயுதங்களில் இந்தியாவுக்கு நம்பகத்தன்மை இல்லை. ரஷ்யாவின் ஆயுதங்களில் செயல்திறன் குறைப்பாடும் காணப்படுவது காரணமாக கூறப்படுகிறது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்கி வந்த இந்தியா தற்போது அமெரிக்காவிடம் இருந்து வாங்கி வருகிறது. இத்துடன் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ரஷ்யா ஆயுதங்களை சப்ளை செய்வதும் காரணங்களாக பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய கொள்கை இயக்குநர் விக்டர் கிளடோவ் கூறுகையில், ''சீனாவுடன் இணைந்து நாங்கள் அணுசக்தி அல்லாத நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து வருகிறோம். எப்போது இந்தப் பணி முடியும் என்று இப்போதே கூற முடியாது. நிலம், வான், கடற்படை ஆகியவற்றுக்கான ஆயுதங்கள் தயாரிப்பில் சீனாவுக்கு உதவி வருகிறோம்.
எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல் குறித்து எச்சரிக்கை செய்யும் கண்காணிப்பு கருவிகளையும் சீனாவுடன் இணைந்து ரஷ்யா தயாரித்து வருகிறது. ஏவுகணைகள், சாட்டிலைட், சென்சார் ஆகியவற்றையும் கண்டறிந்து இந்தக் கண்காணிப்பு கருவி எச்சரிக்கை செய்யும். வான், தரை என்று அனைத்து வகையிலும் இந்த கருவி எச்சரிக்கை செய்யும்.
இதுகுறித்து ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து இருக்கிறார். அதாவது, பல ஆண்டுகளாக ரஷ்யாவிடம் இருக்கும் ஏவுகணை எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு இயக்கத்தை சீனாவிடம் ரஷ்யா பகிர்ந்து கொள்ளும் என்று தெரிவித்து இருந்தார்.
கிழக்கு லடாக்....இந்தியப் பகுதியில் சாலை அமைக்கும் சீனா... அதிர்ச்சி சாட்டிலைட் புகைப்படங்கள்!!
ரஷ்யாவிடம் இருந்து சீனா 1990களில் இருந்து ஆயுதங்கள் வாங்கி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து 12 டீசல் நீர் மூழ்கிக் கப்பல்களை வாங்கி இருந்தது. இந்தியாவும் இதுபோன்ற நீர் மூழ்கிக் கப்பலை வைத்திருக்கிறது.
தங்களது தொழில்நுட்பங்களை சீனா திருடுகிறது என்று ஒரு பக்கம் ரஷ்யா கூறி வந்தாலும், மறுபக்கம் பீஜிங்கிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து அதிகபட்சமாக Su 35 போர் விமானங்கள், S-400 விமான பாதுகாப்பு தளவாடங்களை சீனா வாங்கியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து சீனா 2000ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி இருந்தது. இது 2005ஆம் ஆண்டில் 3.2 பில்லியன் டாலரை தொட்டது. இது 2010 -2018 ஆம் ஆண்டுகளில் வெறும் 816 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதன் விளைவாக, ரஷ்ய ஆயுத ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 2006 ஆம் ஆண்டில் மொத்த விற்பனையில் 47.7 சதவீதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டில் 13.7 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனாலும், தற்போது மீண்டும் உறவு முளைத்துள்ளது.