இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ஸ்புட்னிக் வி... அடித்துக் கூறும் ராஜ்நாத் சிங்
டெல்லி: கோவிட் -19 தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தான் நம்புவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
அதேபோல பிரிட்டன், அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளைப் போல இந்தியாவில் எந்த தடுப்பு மருந்திற்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பு மருந்து மூன்றாம்கட்ட சோதனையில் உள்ளன.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி
கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்தை உருவாக்க பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து முயன்று வருகின்றன. இந்தச் சூழலில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆகஸ்ட் மாதமே கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்தை ரஷ்யா அறிவித்தது.
தயங்கிய நாடுகள்
இருப்பினும், மூன்றாம்கட்ட பரிசோதனைக்கு முன்னரே தடுப்பு மருந்து அறிவிக்கப்பட்டதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டினர். இருப்பினும், ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தின் முதல்கட்ட முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அதன் மீது உலக நாடுகளுக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டது. மேலும், இந்திய, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தடுப்பு மருந்தின் சோதனையும் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஸ்புட்னிக் வி
இந்நிலையில், தடுப்பு மருந்து சோதனை விரைவில் முடிக்கப்பட்டு ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தான் நம்புவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லக்னோவின் கிங் ஜார்ஜின் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியே கலந்து கொண்ட அவர், "நமது விஞ்ஞானிகள் ஸ்புட்னிக் வி சோதனைகளை விரைவில் முடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். தடுப்பு மருந்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியவுடன் முதலில் மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பு மருந்து போடப்படும்.
எதிரியுடன் போராடும் இந்தியா
இந்த கோவிட் -19 தொற்று ஒருபோதும் நினைத்துப் பார்க்காத ஒரு போரை நடத்த நம்மைக் கட்டாயப்படுத்தியுள்ளது. வெடிமருந்துகள், ராணுவ வீரர்களுக்குப் பதிலாக, இந்த யுத்தத்தில் சுகாதார பணியாளர்களை நாம் முன்னணியில் வைத்திருக்கிறோம். அவர்கள் கண்ணால் பார்க்க முடியாத இந்த எதிரிக்கு எதிராக இடைவிடாது பணியாற்றுகின்றனர். 100 ஆண்டுகளுக்கு முன் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவிய போதும் இதே சூழல்தான் ஏற்பட்டது.
எந்த சூப்பர்மேனும் காப்பாற்ற மாட்டார்
இந்த தொற்றிலிருந்து எந்த சூப்பர்மேனும் மக்களை காப்பாற்ற முடியாது. மருத்துவர்கள்தான் இங்கு உண்மையான சூப்பர் ஹீரோக்கள். சமூக வலைத்தளங்களில் ஒரு சூப்பர் ஹீரோ டாக்டர்களுக்கு தலைவணங்கும் படத்தைப் பார்த்தேன். இந்தப் படமே தற்போதைய நிலைக்குப் பொருத்தமானது. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு மனித சமூகம் எப்போதும் கடன்பட்டிருக்கும்" என்றார்.
சுகாதார துறை மோசமாகியிருக்கும்
தொடர்ந்து லக்னோவின் கிங் ஜார்ஜின் மருத்துவ பல்கலைக்கழகம் குறித்துப் பேசிய அவர், "அடுத்த 30 ஆண்டுகளில் சர்வதேச அளவில் மிக முக்கிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கிங் ஜார்ஜின் மருத்துவ பல்கலைக்கழகம் மாறும். நாட்டில் தற்போது சுகாதார துறையில் பற்றாக்குறை உள்ளது. நரேந்திர மோடி அரசு தற்போது சுகாதார துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் 135 கோடி மக்களுக்குச் சுகாதார சேவைகளை வழங்குவது ஒரு பெரிய பொறுப்பு. நமது ஜிடிபி-இல் 1.16% சுகாதாரத்திற்காகச் செலவிடப்படுகிறது. சுகாதாரத் துறையில் தனியார் துறை இல்லாமல் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.
இப்போது 541
மேலும், நம் நாட்டிலுள்ள சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் 381 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது நாடு முழுவதும் 541 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ராணுவ வீரர்களுடன் இணைந்து மருத்துவர்களும் நாட்டிற்குச் சேவையாற்ற வேண்டும்" என்றார்.