அதிநவீன ஏ.கே. 203 ரக துப்பாக்கிகள்: இந்தியா- ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்து
டெல்லி: ரஷ்யாவின் அதிநவீன ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை வாங்குவது மற்றும் தயாரிப்பது தொடர்பாக இந்தியா- ரஷ்யா இடையே ஒப்பந்தம் இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
Recommended Video
இந்தியா- ரஷ்யா இடையே நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஒரு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார் விளாடிமிர் புதின். இந்தியா- ரஷ்யா இடையேயான உச்சி மாநாடு கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் அந்த மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது இன்றைய தினம் அந்த மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை செர்கே ஷாய்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் மற்று்ம ரஷ்ய வெளியுறவுத் துறை செர்கே லவ்ரோவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
புதின் வருகை
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் வருகை தந்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துவார். இந்த நிலையில் இந்தியா- ரஷ்யா இடையே ஏகே 203 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
10 ஆண்டுகள்
ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளிடையே ராணுவம் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் 2021- 2031 ஆம் ஆண்டு வரை, அதாவது 10 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
ரஷ்யா
6 லட்சம் எண்ணிக்கையிலான ஏகே 203 ரக துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ரஷ்ய பாதுகாப்புத் துறை செர்கே ஷாய்குவும் கையெழுத்திட்டுக் கொண்டனர். சிறிய அளவிலான ஒப்பந்தங்களை வாங்கவும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறை
இந்த ஏகே 203 துப்பாக்கிகளுக்காக ரூ 5100 கோடி ஒதுக்கீடு செய்ய பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் இந்தியா- ரஷ்யா கூட்டு முயற்சியில் ஏகே 203 துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான ஆலை தொடங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர்
இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் கூறுகையில், இந்தியா- ரஷ்யா இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள் அமைதியை கொண்டு வரும். ஒட்டுமொத்த பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையும் ஏற்படும். சிறிய ஆயுதங்கள், ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தானதில் மகிழ்ச்சி. சவாலான தருணங்களை சமாளிக்க இந்தியாவுடன் ரஷ்ய முக்கிய கூட்டாளியாக இருக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
வெளியறவுத் துறை அமைச்சர்
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர் கூறுகையில் இரு நாட்டு வெளியுறவு துறை அமைச்சர்களிடையே நடத்தப்பட்ட 2+2 பேச்சுவார்த்தையில் பயங்கரவாதம், இனவாதம், வன்முறை உள்ளிட்டவற்றை எதிர்கொள்வது குறித்து பேசப்பட்டது. கடலோர பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டது என்றார்.
வெளிநாட்டு பிரச்சினைகள்
இன்று மாலை நடைபெறும் மாநாட்டின் போது இரு தரப்பு நல்லுறவு, வெளிநாட்டு பிரச்சினைகள், எல்லை பாதுகாப்பு, பயங்கரவாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. ஒரு நாள் பயணமாக இந்தியா வரும் அதிபர் புதின் மாநாடு முடிவடைந்தவுடன் ரஷ்யா புறப்படுகிறார்.