சபரிமலை மறுசீராய்வு.. 65 மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு.. உச்சநீதிமன்றம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு ஒத்தி வைத்துள்ளது. வரும் வியாழக்கிழமையில் இருந்து இந்த வழக்கு விசாரிக்கப்படும், மனுக்கள் மீது யார் யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரம் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018-ம் வருடம் செப்டம்பர் மாதம்தான் சபரிமலை கோவில் வழக்கு தீர்ப்பு வந்தது. கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
எல்லா பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம் என்று 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள். இந்த நிலையில் தீர்ப்பிற்கு பின் பல முறை கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்தது. வலதுசாரி அமைப்புகள், பாஜகவினர் உட்பட பலர் மிக கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். அதன்பின் இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்குள் கடந்த 2019 ஜனவரி 2ம் தேதி நுழைந்த இரண்டு பெண்கள் அங்கு சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக நிறைய சீராய்வு மனுக்கள் வரிசையாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 5 ரிட் பெட்டிஷன் உட்பட மொத்தம் 65 மனுக்கள் இதுவரை இந்த தீர்ப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஏற்றுக்கொள்வதாக கடந்த 2018 வருடம் அக்டோபர் 23ம் தேதி கூறியது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு 9 நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன அமர்விற்கு மாற்றியது. இதனால் சீராய்வு மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மீதான விசாரணை இன்று காலை நடந்தது. இந்த மறுசீராய்வு மனுக்களை விசாரிக்கலாமா, பழைய தீர்ப்பு சரிதானா என்று இன்று விசாரித்தனர். இன்னொரு பக்கம் மற்ற வழிபாட்டுத் தலங்களில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் விசாரிக்கப்பட்டது. அதாவது இஸ்லாமிய மசுதிகள், பார்சி வழிபாட்டு தளங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக தனியாக விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று பல்வேறு விதமான வாதங்கள் வைக்கப்பட்டது. நிறைய மனுதாரர்கள் இருந்த காரணத்தால், மனுதாரர்களுக்கு இடையிலேயே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. முதல் விஷயமாக அரசு தரப்பு சார்பாக சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா சபரிமலை வழக்கோடு சேர்த்து மற்ற மத வழிபாட்டு தளங்களின் வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதாவது மசூதிகளில் பெண்களை அனுமதிப்பது, பார்சி வழிபாட்டு தளங்களில் வேறு மத ஆண்களை திருமணம் செய்த பார்சி பெண்களை அனுமதிப்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஒரு மத விஷயமாக பார்க்காமல், 3 மத வழக்காக, பெண்கள் உரிமை, அடிப்படை உரிமை சார்ந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை சில மனுதாரர்கள் தரப்பு எதிர்த்தது. அதே சமயம் இன்னும் சில மனுதாரர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதே சமயம் இந்த மனுக்களை தனியாக விசாரிகலாம். இதை சபரிமலை வழக்கோடு சேர்த்து விசாரிப்பது சரியாக இருக்காது. சபரிமலை வழக்கை தனி வழக்காக விசாரிக்க கூடாது என்று கூறினார்கள்.
இந்த யோசனைக்கு, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கு மிகப்பெரிய விஷயங்களை விவாதிக்க நினைக்கிறது. இது தேசிய அளவில் பிரச்சனையாக முடியும். அவ்வளவு முக்கியமான விஷயங்களை மறு சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கில் விசாரிப்பது சரியாக இருக்காது. மறுசீராய்வு வழக்குகளில் தீர்ப்பு தொடர்பான தகவலை மட்டும்தான் விசாரிக்க வேண்டும், என்றனர்.
அதேபோல் சபரிமலை மறுசீராய்வு விசாரணையில், ஐந்து நீதிபதி அமர்வு, மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு அனுப்பியது. பொதுவாக மறுசீராய்வு மனுக்களில், தீர்ப்பு சரியா, தவறா என்றுதான் முடிவு செய்வார்கள். ஆனால் அதை எல்லாம் மீறி, ஒரு மறுசீராய்வு மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு எல்லாம் அனுப்ப மாட்டார்கள். சபரிமலை வழக்கில் மட்டுமே இப்படி நடந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று வாதம் வைக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான 9 பேர் அமர்வு மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது. இதில் அனைத்து மனுக்கள் மீதான விசாரணையும் நடக்கும். மனுக்கள் மீது யார் யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரம் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மறுஆய்வு மனுவை விசாரிப்பதற்கான அமர்வு ஒரு விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடியுமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்படும் என்று கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வியாழக்கிழமையில் இருந்து இந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்காக இது பார்க்கப்படுகிறது . தினமும் விசாரணை நடைபெறும் என்றும், மனுதாரர்கள் சார்பில் தலா ஒரு மூத்த வழக்கறிஞர் மட்டுமே வாதிட முடியும் என்றும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் இந்த மொத்த விசாரணையும் அதிக கவனம் பெற்றுள்ளது.