சபரிமலை .. அன்று தீபக் மிஸ்ரா பெஞ்ச் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு இதுதான்!
Recommended Video
டெல்லி: சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் தீர்ப்பை கோகாய் தலைமையிலான அமர்வு ஆய்வு செய்யலாம் என தெரிகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான அதாவது மாதவிடாய் வயதுடைய பெண்கள் காலம் காலமாக அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், நாரிமன், சந்திரசூட், நீதிபதி இந்து மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2018-இல் தீர்ப்பு வழங்கினர். அப்போது அந்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு என்ன என்பதை பார்ப்போம்.
கேரள அரசுகளின் பல்டி முதல்.. தீர்ப்பு வரை.. சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கு கடந்து வந்தபாதை
தீபக் மிஸ்ரா மற்றும் கான்வில்கர்
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கான்வில்கர் அளித்த தீர்ப்பில், பக்தியை பாலின பாகுபாட்டிற்கு உட்படுத்த முடியாது. பக்தியை பொருத்தமட்டில் ஆணாதிக்க கருத்தை சமத்துவம் என்பதில் அனுமதிக்க முடியாது. பன்முகத்தன்மையுடன் நம் வாழ்க்கை இணைப்பதற்கான அடிப்படைதான் மதம். ஐயப்ப பக்தர்கள் தனியாக ஒரு பிரிவை உருவாக்கக் கூடாது. பெண்களை சிறுமையாகவும் பலவீனமாகவும் நடத்தக் கூடாது. இந்த நாட்டில் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். மாதவிடாய் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது, பாரபட்சமானதாகும். மாதவிடாய் காலத்தில் இருக்கும் 10 வயது முத்ல 50 பெண்களை கோயிலினுள் அனுமதிப்பது என்பது மதத்தின் முக்கியத்துவமானதில்லை. இத்தகைய வயதுடைய பெண்களை அனுமதிக்காமல் இருப்பது இந்து மதத்தின் வழிப்படும் உரிமையை மீறுவதாகும். ஆண்கள், பெண்களுக்கு சரிசமமானதுதான் வழிப்படும் உரிமையாகும். அதைவிடுத்து அவர்களை தடுப்பது என்பது மத ரீதியிலான ஆணாதிக்கமாகும் என்றார்கள்.
நாரிமன் தீர்ப்பு
ஐயப்ப பக்தர்கள் தனி ஒரு பிரிவை உருவாக்கக் கூடாது. ஏனெனில் அவர்களே இந்து மத வழிபாடின் ஒரு பிரிவினர் ஆகும். அனைத்து வயதுடைய பெண்களும் ஐயப்பனை தரிசிக்க சரிசமமாக உரிமை வழங்க வேண்டும். கோயிலுக்கு ஒருவர் நுழைவதை தடுப்பதாக பாலினம், மாதவிடாய் காலம் ஆகியவை இருக்க முடியாது. 10 வயது முதல் 50 வயதுடைய பெண்களை அனுமதிக்க மறுப்பது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி எண் 26-க்கு எதிரானது. கோயிலில் வழிபாடு நடத்த பெண்களுக்கு சம உரிமை உள்ளது என்றார்.
நீதிபதி சந்திரசூட்
அறநெறி குறித்த கருத்துகள் மற்றவர்களின் கண்ணியத்தை புண்படுத்தும் செயலாகும். எந்த ஒரு பழக்க வழக்கமோ மத ரீதியிலான வழக்கமோ உடலியல் மாற்றம் என்ற ஒற்றை காரணத்தை கொண்டு கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. சில கடவுள்களின் பிள்ளைகளாக பெண்களை நடத்துவதும் அரசியலமைப்புக்கு எதிரானது. பெண்களை புறக்கணிக்கும் எந்த ஒரு மத ரீதியிலான பழக்கத்திற்கு இந்த கோர்ட் ஆதரிக்காது.
நீதிபதி இந்து மல்ஹோத்ரா
மதரீதியாக உள்ள நம்பிக்கைகளை சாதாரணமாக எடுக்கக் கொள்ளக் கூடாது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது என்பது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். சம உரிமை என்பதை மத ரீதியிலான பழக்கங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது. மேலும் மத ரீதியிலான பழக்கங்களை நீதிமன்றங்கள் முடிவு செய்ய முடியாது. அதை வழிபாடு நடத்துபவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தனிமனித நம்பிக்கையாகும். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதால் இங்கு பல நம்பிக்கைகள் இருக்கும். நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துகள் குறித்து கவலையில்லை. ஒரு மதத்தினருக்கு அவர்கள் பின்பற்றும் நம்பிக்கைகள் நியாயமில்லாததாகவும் பகுத்தறிவற்றவையாகவும் இருந்தாலும் கூட அதை நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்றார். இந்த வழக்கில் மற்ற 4 பேர் ஒரே தீர்ப்பை வழங்கிய நிலையில் இந்து மல்ஹோத்ரா மட்டும் சபரிமலையில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என கூறியது குறிப்பிடத்தக்கது.