கேரள அரசுகளின் பல்டி முதல்.. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை.. சபரிமலை வழக்கு கடந்து வந்த பாதை
Recommended Video
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் கூடுதல் பெஞ்ச்சுக்கு பரிந்துரைத்துள்ளது.
கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. மற்ற கோயில்களைப் போலல்லாமல், சபரிமலை கோயில் எல்லா நேரங்களிலும் திறந்திருக்காது. சபரிமலை கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது உலகின் மிகப்பெரிய யாத்திரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயில் கேரள அரசின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பான, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
சபரிமலை கோயிலில் மூலவர் ஐயப்பன். சபரிமலை கோவிலுக்கு வருவதற்கு முன்பு, பக்தர்கள் தங்கள் மனதையும், உடலையும், தூய்மைப்படுத்தும் வகையில் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டில் மட்டும் 3.5 கோடி பக்தர்கள் வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலுக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய கோரிய இந்த வழக்கு கடந்து வந்த பாதை இதுதான்:
2006- சபரிமலை ஐயப்பன் கோவிலிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கக் கோரி, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தது.
2007- முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையிலான அப்போதைய எல்.டி.எஃப் (இடதுசாரி ஜனநாயக முன்னணி) அரசு பெண் பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவதை எதிர்த்த பொது நலன் வழக்கை ஆதரித்து நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை- உச்சநீதிமன்றம்
2016- ஜனவரி 11 ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கோயிலுக்குள் பெண் பக்தர்களை தடை செய்வது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. 2016 ஏப்ரல் 11ம் தேதியன்று, முதல்வர் ஓமன் சாண்டி தலைமையிலான அப்போதைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, உச்ச நீதிமன்றத்தில், பக்தர்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியது. அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியளிக்க வேண்டாம் என கோரியது.
2016- ஏப்ரல் 21 ம் தேதி கோயிலுக்குள் பெண்கள் நுழைவதை ஆதரித்து, ஹிந்த் நவோதன பிரதிஷ்டான் மற்றும் நாராயணாசிரம தபோவனம் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் எல்.டி.எஃப் அரசு அமைந்தது. இதையடுத்து, ஒரு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, அனைத்து வயதினருக்கும் பெண்கள் ஐயப்பன் கோவிலில் நுழைவதற்கு ஆதரவளிப்பதாகக் கூறியது.
2017- உயர் நீதிமன்றம் இந்த வழக்கை அரசியலமைப்பு பெஞ்சிற்கு மாற்றியது.
2018- அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதி அரசியலமைப்பு பெஞ்ச் இந்த விவகாரம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. செப்டம்பர் 28 அன்று, 4: 1 என்ற அடிப்படையிலான தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களை நுழைய அனுமதித்தது. தீர்ப்பைத் தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே பல மோதல்கள் நிகழ்ந்தன. தீர்ப்பிற்குப் பிறகும், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைவதை தடை செய்து சபரிமலையில் பக்தர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
2019: நவம்பர் 14ம் தேதி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் 65 தரப்பினர் தொடர்ந்த சீராய்வு மனுக்களை விசாரித்து, வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய கூடுதல் பெஞ்சுக்கு அனுப்பியது.