சபரிமலை மறு ஆய்வு வழக்கு: 5 நீதிபதிகள் பெஞ்ச்சில் இருந்து 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்
Recommended Video
டெல்லி: சபரிமலை அய்யப்பன் கோயிலில் இளம் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் சுவாமி கோவிலில் 10 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களை சாமி தரிசனம் செய்ய பல ஆண்டுகளாக அனுமதி கிடையாது. இதை எதிர்த்து பெண் வழக்கறிஞர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம்இல்லாமல் அனைத்து பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
மறுசீராய்வு
இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பை எதிர்த்த கேரளாவைச் சேர்ந்த நாயர் சொசைட்டி உள்பட பல்வேறு அமைப்புகள் , தனிநபர்கள் தரப்பு என மொத்தம் 51 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
வாதங்கள் நிறைவு
இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு வாதங்கள் முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் கடந்த 3 மாதங்களுக்க முன்பு ஒத்திவைத்திருந்தது.
தீர்ப்பு வாசிப்பு
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், ஏ.எம். கன்வீல்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வாசித்தது.
தலைமை நீதிபதி கருத்து
அப்போது உச்ச நீதிமன்றம் புதிய தலைமை நீதிபதி பாப்டே தலைமையில் 7 நீதிபதிகள் பெஞ்ச் -க்கு சபரிமலை வழக்கு மாற்றப்படுவதாக அறிவித்தது. பிற மதவழிபாட்டு இடங்களில் பெண்கள் நுழையும் விவகாரமும் சபரிமலை விவகாரமும் ஒன்றுதான் என்று தீர்ப்பின் போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.
பெண்கள் செல்ல
இதற்கிடையே மண்டல பூஜை வழிபாட்டுக்காக கார்த்திகை பிறந்ததும் 2 மாதங்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 16 ம் தேதி நடைதிறக்கப்பட்டு மேல்சாந்தி பதவியேற்பு விழா நடக்கிறது. அதன்பிறகு 17ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் ஆரம்பம் ஆகிறது. தற்போது உள்ள சூழலில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எந்த தடையும் இல்லை என்பதால், பெண்கள் சபரிமலைக்கு சென்று வழிபட தடையும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்த பிறகே தடையா இல்லையா என்பது தெரியவரும்.