கட்சிக்குள் ராஜேஷ் பைலட் சாதித்தார்... மகன் சச்சின் வெளியேற்றம்.... விழிக்குமா காங்கிரஸ்?
டெல்லி: ராஜஸ்தான் காங்கிரசில் மூத்த தலைவராக வலம் வந்த கொண்டு இருந்த ராஜேஷ் பைலட் கட்சிக்குள் நுழைந்த 16வது ஆண்டில் தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டு இருந்தார். அதேபோல் 2004ல் எம்.பி.யான சச்சின் பைலட்டும் இன்று காங்கிரஸ் தலைமைக்கு சவாலாக எழுந்துள்ளார்.
ராஜஸ்தான் காங்கிரசில் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தவர் ராஜேஷ் பைலட். இவரை எதிர்த்து கேள்வி கேட்கமுடியாது. தன்னை கட்சிக்குள் வலுவாக வைத்து இருந்தார். தனக்கு எதிராக எந்த சிக்கலும் ஏற்படாது என்ற நம்பிக்கை கொண்டு இருந்தவர். தலைமை தகுதிகளுடன் வலம் வந்தவர். இன்று அவரது மகனும் அதே தகுதிகளைப் பெறுவதற்கு கட்சித் தலைமையுடன் மோதினார்.
சச்சினின் தந்தை ராஜேஷ் பைலட் சாதாரண பால்காராக இருந்து பின்னர் இந்திய விமானப் படையில் பைலட் ஆக மாறினார். தன்னுடைய சிறு வயதில் அரசியல் எல்லைகளை தொட்டவர் ராஜேஷ் பைலட். 40வயதில் அமைச்சராக பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக இரண்டு முறை மக்கள் அவை தேர்தலில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அதே பாதையில் சச்சினும் அரசியலில் காலடி எடுத்து வைத்து அங்கீகாரம் பெற்றார்.
1990ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அர்ஜூன் சிங், எஸ்.பி. சவான் ஆகியோருக்கு எதிராக தனது கொடியை தூக்கிப் பிடித்தார். தான் பொறுப்பில் இருந்து இருந்தால், பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்து இருக்காது என்று அதிரடியாக தெரிவித்தார். இத்துடன் இவரது போர் நின்றுவிடவில்லை. பிரதமராக இருந்த பிவி நரசிம்மராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். நரசிம்மராவுக்கு ஆதரவாக இருந்த சந்திரசுவாமிக்கு எதிராக குரல் உயர்த்தி இறுதியில் , சந்திரசுவாமி சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரசுவாமி சிறை செல்வதற்கு ராஜேஷ் பைலட்தான் பெரும்பங்கு வகித்தார் என்று கூறப்பட்டது.
தன்மானம் முக்கியம்.. மன்னிப்பு கேளுங்கள்.. காங்.மேலிடத்தை சீண்டிய சச்சினின் கோரிக்கை.. நடந்தது என்ன?
இதேபோல் இன்று இவரது மகனும் காங்கிராஸ் கட்சிக்குள் தனது உரிமைகளுக்கும், இடத்தை உறுதி செய்து கொள்ளவும் குரலை உயர்த்தினார். தனது தந்தையைப் போலவே எதை எப்போது பேச வேண்டுமோ அப்போது பேசுவார். இவரை காங்கிரஸ் தலைமை பதவிக்கு, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா பரிந்துரை செய்து இருந்தார்.
தனது தந்தையின் பெயரால் அரசியலுக்கு வந்தார் என்றாலும், இவர் தனது கடின உழைப்பை கட்சிக்காக அர்ப்பணித்துள்ளார். கிராமப்பகுதிகளுக்கு சென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரியதுடன் தனக்கு என்று தனி அங்கீகாரத்தை தேடிக் கொண்டவர். 2018ல் நடந்த ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலிலும் கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் களம் கண்டு கட்சிக்கு அமோக வெற்றியை தேடிக் கொடுத்தார். முதல்வராக வேண்டும் என்பது சச்சினின் ஆசை. ஆனால், முதல்வராக வேண்டும் என்று அசோக் கெலாட்டும் ஒரு பக்கம் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார். இதையடுத்து, மூத்தவர்களுக்குத்தான் தரவேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் தலைமை அசோக் கெலாட்டுக்கு வாய்ப்பு கொடுத்தது.
இதே கெலாட் உடன்தான் அவரது தந்தை ராஜேஷ் பைலட்டும் அரசியல் செய்துள்ளார். அப்போது அவர்களுக்கு ஒரே வயது. ஆனால், இன்று இவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இடைவெளியை ஏற்படுத்தியது.
சோனியா காந்தி 1998ல் காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பு ஏற்கும்போது, சரத் பவார், புர்னோ சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சோனியாவுக்கு ராஜேஷ் பைலட்டு எதிர்ப்பு தெரிவித்தாலும் கட்சியில் இருந்து வெளியேறவில்லை. சோனியாவுக்கு எதிரான கோஷ்டியுடன் கைகோர்க்கவில்லை. கட்சிக்குள் இருந்து தன்னுடைய நிலையை, சுயமரியாதையை நிலைநாட்டி வந்தார்.
பின்னர், 2000மாவது ஆண்டு ஜிதேந்திர பிரசாத்துடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட ராஜேஷ் பைலட் முடிவு செய்து இருந்தார். ஆனால், அதற்குள் கார் விபத்தில் இறந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறாமல் தனது உரிமையை போராடி பெற்றவர் ராஜேஷ் பைலட்.
ஆனால், இன்று காங்கிரஸ் தலைமை தனக்கு மரியாதை கொடுக்கவில்லை, ஓரம் கட்டப்படுகிறார், அவமானப்படுத்தப்படுகிறார், தனது உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லை போன்ற காரணங்களால் இன்று காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு காங்கிரஸ் அங்கீகாரம் அளிக்க வேண்டும். கட்சிக்கு மூத்தவர்கள் தேவை என்றாலும், உழைப்புக்கு மரியாதை அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். உள்கட்சி அரசியலால் காங்கிரஸ் தனக்குத் தானே குழி தோண்டுகிறதோ என்ற கேள்வி எழுகிறது. விழிக்குமா காங்கிரஸ்.