வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்க.. சச்சின் பைலட்டிடம் போனில் சொன்ன ப.சிதம்பரம்.. வெளியான தகவல்
டெல்லி: தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக சச்சின் பைலட் நீதிமன்றத்தை நாடிய அதே தினத்தில், அதாவது நேற்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் சச்சின் பைலட், தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தனக்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், இதனால் அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் சச்சின் பைலட் கூறினார். ஆனால், அவர் பாஜகவுடன் இணந்து செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அசோக் கெலாட் கூட்டிய சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை. எனவே, துணை முதல்வர் பதவியில் இருந்தும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவரது ஆதரவு அமைச்சர்கள் இருவரும் நீக்கப்பட்டனர்.
ராகுல் பதவி விலகியதும்.. எனது சுயமரியாதை போயிற்று.. அவமானமே விஞ்சியது.. மவுனம் கலைத்த சச்சின் பைலட்!
கட்சித் தாவல் தடைச் சட்டம்
இந்த நிலையில், கொறடா உத்தரவை மீறி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது அரசியல் சாசனத்தின் 10வது பிரிவின் கீழ் அதாவது கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ், நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி சபாநாயகர் சி.பி.ஜோஷிக்கு கடிதம் எழுதினார்.
சபாநாயகர் நோட்டீஸ்
இதையடுத்து, சச்சின் பைலட் மற்றும் அவர் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு, 3 நாட்களில் விளக்கம் அளிக்க கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை, இன்றுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கதவுகள் திறந்துள்ளது
இந்த நிலையில், நேற்று, ப.சிதம்பரத்தை போனில் தொடர்பு கொண்டு சச்சின் பைலட் ஆலோசனை நடத்தியுள்ளார். சச்சின் பைலட் வியாழக்கிழமை தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு மூத்த காங்கிரஸ் தலைவருடன் பேசியதாக பிடிஐ செய்தி வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியின் "கதவுகள் இன்னும் திறந்திருக்கிறது" என்று அந்த தலைவர் சச்சினிடம் கூறியதாகவும் பிடிஐ செய்தி கூறியது.
வாய்ப்பை பயன்படுத்துங்கள்
இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று ப.சிதம்பரத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சச்சின் தன்னிடம் பேசியதாக, ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டுள்ளார். "அவர் நேற்று மதியம் என்னிடம் பேசினார்," என்று சிதம்பரம் உறுதி செய்துள்ளார். ஆலோசனை நடத்த காங்கிரஸ் தலைமை அழைப்புவிடுத்துள்ளது. எனவே, அங்கு எல்லாவற்றையும் பேசுங்கள் என்று சச்சினுக்கு அறிவுறுத்தினேன். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நான் அவருக்கு அறிவுறுத்தினேன், என்று ப.சிதம்பரம் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
போன் போட்ட சச்சின்
சிதம்பரத்தைத் தவிர, பிரியங்கா காந்தியும் சச்சினுடன் பேசியுள்ளார். அவர் கடந்த புதன்கிழமை, பைலட்டுடன் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் தீர்வு கிடைக்காத நிலையில், சச்சின் பைலட்டே, ப.சிதம்பரத்திற்கு போன் போட்டு பேசியுள்ளார் என கூறப்படுகிறது. போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், காங்கிரஸ் தலைமையுடன் சமாதானமாக போக சச்சின் விரும்புவதை இதுபோன்ற சம்பவங்கள் உறுதி செய்வதாக அமைந்துள்ளன.