ராஜஸ்தான் அரசியலில் திடீர் மாற்றம்...14ல் நம்பிக்கை வாக்கெடுப்பு...சச்சின் ராகுல் இன்று சந்திப்பு!!
டெல்லி: ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் சச்சின் பைலட், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்துப் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையா இல்லையா என்பது குறித்து விளக்கம் அளிக்க சச்சின் பைலட் மறுத்து இருப்பதால், அந்த மாநில காங்கிரஸ் அரசியலில் திருப்பம் ஏற்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்தார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட புகைச்சல் காரணமாக தனது ஆதரவாளர்களுடன் சச்சின் வெளியேறினார். டெல்லியில் முகாமிட்டார். இவரை தவறாக பாஜகதான் வழி நடத்துகிறது என்று அசோக் கெலாட் குற்றம்சாட்டி இருந்தார்.
இவரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமாதானம் பேசினர். கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால், சச்சின் ஏற்றுக் கொள்ளவில்லை, சட்டப்பேரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவருக்கும், இவரது ஆதரவாளர்கள் 18 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் நீக்கம் செய்யப்பட்டார். இவரது ஆதரவாளர்களும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தியை சந்திக்க சச்சின் பைலட் நேரம் கேட்டு இருந்ததாகவும், ராகுல் காந்தி ஒதுக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை இவர்களது சந்திப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது பிரியங்கா காந்தியும் உடன் இருப்பார் என்று தெரிய வந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி வேணுகோபாலை சந்தித்து நேரம் ஒதுக்குமாறு சச்சின் கேட்டதாகவும், இதன்படி அவர் நேரம் ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது.
பார்ட் - டைம்மில் பிஇ பிடெக் படிக்க ஆசையா? இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சட்டசபை கூடுகிறது. அப்போது நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருப்பதாக காங்கிரஸ் செயல் கமிட்டி உறுப்பினர் ரகுவீர் மீனா தெரிவித்துள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏற்றுக் கொள்வேன் என்று முதல்வர் அசோக் கெலாட்டும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையை தொடர்பு கொண்டு இருப்பதாகவும், விரைவில் ராஜஸ்தான் அரசியலில் சிக்கல் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை அளித்து இருப்பதாகவும் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர்களை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு, பேசுமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சச்சின் பைலட்டுடன் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரியானாவில் இருக்கும் ஓட்டலில் தங்கி வருகின்றனர்.