ராகுல் பதவி விலகியதும்.. எனது சுயமரியாதை போயிற்று.. அவமானமே விஞ்சியது.. மவுனம் கலைத்த சச்சின் பைலட்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகிய போதே எனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள பெரும் போராட்டம் நடத்தினேன் என நேற்று துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் ராகுல்காந்தி தனது காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு விலகினார். அப்போதிலிருந்தே அசோக் கெலாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனக்கு எதிராக திரும்பினர்.
அன்று முதல் சுயமரியாதையை காத்துக் கொள்ள மிகப் பெரும் போராட்டமாக அமைந்தது. எனக்கு அசோக் கெலாட் மீது எந்த கோபமும் இல்லை. நான் எந்த சிறப்பு அதிகாரத்தையும் அவரிடம் கேட்கவில்லை. தேர்தல் நேரத்தில் ராஜஸ்தான் வளர்ச்சிக்காக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பணியாற்ற வேண்டும் என விரும்பினேன்.
பாஜகவில் சேர போகிறேனா.. யார் சொன்னது.. அப்படியெல்லாம் ஒரு திட்டமும் இல்லை.. சச்சின் பைலட் ஓபன் டாக்!
ராஜஸ்தான் வளர்ச்சி
ஆனால் அசோக் கெலாட் என்னை அனுமதிக்கவில்லை. ராஜஸ்தான் வளர்ச்சிக்காக உழைக்க என்னையும் எனது ஆதரவாளர்களையும் அவர் விடவில்லை. அதிகாரிகளும் எனது உத்தரவுகளை பின்பற்றக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். எந்தக் கோப்புகளும் எனது பார்வைக்கு அனுப்பப்படுவதில்லை.
விவகாரங்கள்
பல மாதங்களாக அமைச்சரவைக் கூட்டங்களும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டங்களும் நடத்தப்படவில்லை. என்னை எதையும் செய்ய அனுமதிக்காததற்கு எனக்கு எதுக்கு துணை முதல்வர் பதவி? உறுதியளித்த மக்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? இந்த விவகாரங்களை நான் பலமுறை எழுப்பியுள்ளேன்.
பாஜகவுக்கு
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரிடமும் மூத்த நிர்வாகிகளிடமும் நான் எனது பிரச்சினையை தெரிவித்தேன். அசோக் கெலாட்டிடமும் கூறினேன். அப்போதும் நான் சொன்னது போல் அமைச்சரவைக் கூட்டங்களும் எம்எல்ஏக்கள் கூட்டங்களும் நடத்தப்படவில்லை. விவாதம் நடத்தவும் ஆலோசனை நடத்தவும் இடமும் இல்லை. பாஜகவில் நான் இணையவுள்ளேன் என கூறுவது தவறு. கடந்த 5 ஆண்டுகளாக நான் பாஜகவுக்கு எதிராக பணியாற்றியுள்ளேன்.
ஒரு வார்த்தை
ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட்ட நான் எனது கட்சிக்கு எதிராக ஏன் உழைக்க வேண்டும்? பாஜகவில் நான் இணைவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனது கட்சிக்கு எதிராக நான் ஒரு வார்த்தையையும் தவறாக சொல்லவில்லை என்றார் சச்சின் பைலட். நேற்றைய தினம் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்தும் அவரது ஆதரவாளர்கள் இருவர் அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்டனர்.