சசிகலாவைப் போல ஸ்டாலினுக்கும் செக்? தேர்தல் வெற்றி வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் சைதை துரைசாமி
டெல்லி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் முகாந்திரம் இருக்கிறது என்பதால் உடனே விசாரிக்க வேண்டும் என முன்னாள் மேயர் சைதை துரைசாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக மாஜி மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் ஸ்டாலின் 66, 677 வாக்குகளைப் பெற்றார். சைதை துரைசாமியோ 65, 943 பெற்று தோல்வி அடைந்தார். ஆனால் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் ஸ்டாலின் வென்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சைதை துரைசாமி. இந்த வழக்கு விசாரணைகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகியும் இருந்தார்.
சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு
இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னரே 2016-ல் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஸ்டாலின் வெற்றியும் பெற்றார். பின்னர் 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வென்றது செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சைதை துரைசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. சுமார் 3 ஆண்டுகள் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கிடப்பிலேயே இருந்தது.
உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு
இந்நிலையில்தான் திடீரென கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை தூசுதட்டும் முயற்சிகள் நடந்தன. இதன் பின்னணியில் டெல்லி பாஜக மேலிடம் இருப்பதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. அதாவது முதல்வராக கனவு கண்ட சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்ததால் அவரது ஆசை நிராசையானது.
பின்னணியில் பாஜக?
அதேபோல சட்டசபை தேர்தலில் திமுக வெல்லும்; ஸ்டாலின் முதல்வராவார் என்கிற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை மீண்டும் நடத்தினால் அவருக்கும் சிக்கல் ஏற்படுத்தலாம் என்பதால் மும்முரம் காட்டப்பட்டன. ஆனாலும் இந்த முயற்சிகள் கைகூடவில்லை. இப்போது கொரோனா உச்சமாக பரவி வரும் நிலையில் வீட்டில் இருந்தே உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.
கொளத்தூர் மீண்டும் ஸ்டாலின் போட்டி
தற்போதைய தேர்தலில் 3-வது முறையாக ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டுள்ளார். மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த இடைபட்ட காலத்தில் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை மீண்டும் சைதை துரைசாமி தட்டியிருக்கிறார். அதாவது ஸ்டாலினுக்கு எதிரான தமது வழக்கில் முகாந்திரம் இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்க வேண்டும் என சிறப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளாராம் சைதை துரைசாமி.
ஸ்டாலினுக்கு செக்
அதாவது எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என்பதில் பாஜகவும் அதிமுகவும் உறுதியாக இருக்கின்றன. அதனால்தான் எப்படியாவது ஸ்டாலினுக்கு செக் வைக்கும் வகையில் வழக்கை நடத்துங்க.. வழக்கை நடத்துங்க என உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் தொடர்ந்து தட்டப்பட்டு கொண்டே இருக்கின்றன என்கின்றனர் திமுக வக்கீல்கள். ஆனால் இதையும் திமுக வெற்றிகரமாகவே எதிர்கொள்ளும் என்கின்றனர் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.