பிரியங்கா காந்திக்கு ரூ.2 கோடி கொடுத்த யெஸ் வங்கி ராணா கபூர்.. சர்ச்சைகளுக்கு காங்கிரஸ் கூல் பதில்
டெல்லி: ராஜிவ் காந்தி ஓவியத்தை, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், பிரியங்கா காந்தியிடம், ரூ.2 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக பாஜக வெளியிட்ட குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி பதில் சொல்லியுள்ளது.
Recommended Video
யெஸ் வங்கி கடன் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அதன் நிர்வாக குழுவை ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதன் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான், ராணா கபூர் மற்றும் காங்கிரஸ் இடையே உறவு இருப்பதாக பாஜக தரப்பு குற்றம்சாட்டியது. இதற்கு ஆதாரமாக ஒரு சம்பவத்தை வெளியிட்டது.
யெஸ் வங்கி முறைகேடு.. டிஹெச்எப்எல் நிறுவனம், ராணாவின் நிறுவனங்கள உள்பட 7 இடங்களில் சிபிஐ ரெய்டு
குற்றச்சாட்டுகள்
பிரபல ஓவியரான எம்.எப்.ஹுசைன், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை ஓவியமாக வரைந்திருந்தார். இதை பிரியங்கா காந்தி, விற்பனை செய்தார். அதை ராணா கபூர் ரூ.2 கோடி கொடுத்து வாங்கினார். இது லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் என்று, பாஜக தரப்பு குற்றம் சுமத்தியது.
ஏற்கனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான், யெஸ் வங்கி வீழ்ச்சிக்கு காரணம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் இதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளது.
சிங்வி பேட்டி
"ஆம், எம்.எப். ஹுசைன் ஓவியம் தோராயமாக 2 கோடிக்கு விற்கப்பட்டது. எம்.எப். ஹுசைன் உருவாக்கிய ராஜிவ் காந்தியின் உருவப்படத்தை காந்தி குடும்பத்தினர் 2010ல் ராணா கபூருக்கு விற்றனர் " என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். "ரூ. 2 கோடியும் காசோலையாக பெறப்பட்டது மற்றும் பிரியங்கா காந்தியால், இந்த தகவல் வருமான வரி தாக்கலின்போது, முழுமையாக தெரிவிக்கப்பட்டது. நீங்கள் இன்னும் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறீர்களா? " என்று அபிசேக் சிங்வி கேள்வி எழுப்பினார்.
|
காங்கிரஸ் தொடர்பு
பாஜகவின் ஐடி செல் தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் முதல் முறையாக இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். "இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு நிதிக் குற்றமும் காங்கிரஸ் தலைவர்கள் குடும்பத்தோடு, ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. மல்லையா சோனியா காந்திக்கு விமான டிக்கெட்டுகளை அனுப்புவார். மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோருடன் மல்லையா தொடர்பில் இருந்தார். நீரவ் மோடியின் திருமண நகைப் பிரிவை ராகுல் காந்தி திறந்து வைத்தார், இப்போது பிரியங்கா காந்தியிடம், ராணா கபூர் ஓவியம் வாங்கியுள்ளார்" என பட்டியலிட்டார் மால்வியா.
வருமான வரி
இருப்பினும், எம்.எப். ஹுசைன் ஓவியம் ரூ. 2 கோடிக்கு விற்பனையாவது அசாதாரணமானது அல்ல, என்று சிங்வி கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு எம்.எப். ஹுசைனின் ஒரு ஓவியம் ரூ. 13.44 கோடிக்கு விற்பனையானது. 2010ல் ஹுசைன் ஓவியம் 2 கோடிக்கு விற்பனையாகி, காசோலையில் வெளிப்படையாக பணம் பெறப்பட்டு, வருமான வரியிலும் காட்டப்பட்டுள்ளது. யெஸ் வங்கி நெருக்கடியை அடுத்து, பாஜகவும் அதன் அரசும் பதிலளிக்க வேண்டிய உண்மையான கேள்வி வேறு இருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க பார்க்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வளர்ச்சியடைந்துள்ளது. மோடி அரசின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் யெஸ் வங்கி கடன் வழங்கும் விகிதம் கிட்டத்தட்ட 100% வளர்ச்சியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.