சேலம் - சென்னை 8 வழிச்சாலை.. அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு
டெல்லி: சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திட்ட மேலாளர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மத்திய அரசின், 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சாலை தாம்பரத்தை இணைக்கும் வகையில் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் வழியாக முற்றிலும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் துவங்குகிறதா பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ..? மொத்தம் 11.. முதல்வர் அதிரடி கடிதம்
அறிவிப்பானை
இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது.
50 பேர் வழக்கு
இந்நிலையில் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும், அதுவும் 1.20 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
உச்ச நீதிமன்றம் விசாரணை
இந்த வழக்கை விசாரித்த சென்னைர உயர்நீதிமன்றம் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்தது.. 8 வழிச்சாலை பசுமைதிட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலதடை விதிக்க மறுத்துவிட்டது.
மத்திய அரசு மனு
இந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணை செய்ய உச்சநீதிமன்றத்தில் 8 வழி சாலை திட்ட மேலாளர் மனு செய்துள்ளார். 8 வழி சாலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்களாக மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். தேசிய நலன்சார்ந்த மிகப்பெரிய திட்டம் என்பதால் அதனை தடுப்பது தவறான முன்னுதாரணம் ஆகும் என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்,.