விவசாயிகள் போராட்டம்.. "சரியானதை செய்யுங்கள்.." முதல் முறையாக கருத்து சொன்ன சல்மான் கான்
டெல்லி: விவசாயிகள் பிரச்சினையில் முதல் முறையாக கருத்து கூறியுள்ள பாலிவுட் பிரபலம் சல்மான் கான், சரியானதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டெல்லி எல்லையில் 2 மாதங்களை கடந்து 3 விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு சமீப காலமாக சர்வதேச அளவிலான பிரபலங்கள் ஆதரவு அளிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், கரண் ஜோஹர், கங்கனா ரனாவத், சுனில் ஷெட்டி மற்றும் பலர் விவசாயிகள் விவகாரம் குறித்து ட்வீட் செய்திருந்தனர். ஆனால் அவர்கள் விவசாயிகளுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் ட்வீட் செய்திருந்தனர்.
விவசாயிகளுக்கு எதிராக ட்வீட்டுகள்
அஜய் தேவ்கன் "இந்தியா அல்லது இந்திய கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு தவறான பிரச்சாரத்திற்கும் அடி பணியாதீர்கள். இந்த நேரத்தில் ஒன்றுபட்டு நிற்பது முக்கியம்." என்று ட்வீட் செய்தார். திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர், "நாம் கொந்தளிப்பான காலங்களில் வாழ்கிறோம், ஒவ்வொரு திருப்பத்திலும் விவேகமும் பொறுமையும் காலத்தின் தேவை. அனைவருக்குமான தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கு முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வோம் - நமது விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். நம்மை பிரிக்க யாரையும் நாம் விடக்கூடாது" என்று ஜோஹர் ட்விட்டரில் கூறினார்.
எதிர்ப்பு குரல்கள்
அதேநேரம், டாப்சி, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள், விவசாயிகளுக்கு எதிராக பாலிவுட் பிரபலங்கள் கருத்து கூறியதை விமர்சனம் செய்தனர். அதேநேரம், பாலிவுட் சூப்பர் ஸ்டார், சல்மான் கான் இதுவரை கருத்து கூறாமல் இருந்தார். இப்போது முதல் முறையாக கருத்து கூறியுள்ளார்.
சரியானதை செய்யுங்கள்
வியாழக்கிழமை ஒரு ஊடக நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான் விவசாயிகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். "சரியானதைச் செய்ய வேண்டும். மிகச் சரியானதை செய்ய வேண்டும். மிக உன்னதமானதைச் செய்ய வேண்டும்." என்று சல்மான் கான் பதிலளித்தார். சல்மான் கான் சமீபத்தில் தனது 'ஆண்டிம்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இதில் ஆயுஷ் சர்மாவும் நடிக்கிறார். ஆன்டிம், டைகர் 3, கிக் 2, மற்றும் கபி ஈத் கபி தீபாவளி ஆகிய படங்கள் அடுத்தடுத்து சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ளன.
சிங்கிள் ஸ்க்ரீன்
சல்மான் கான் அந்த நிகழ்ச்சியில், மேலும், கூறுகையில், "என்னுடைய மூன்று படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன, சிங்கிள் ஸ்க்ரீன் திரையரங்குகளில் உள்ள சிக்கல் என்னவென்றால், அங்கு மிகக் குறைவான படங்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. இப்போதெல்லாம், இந்த வகை திரையரங்குகள் ஒரு கல்லறை உணர்வைத்தான் கொடுக்கின்றன.
தியேட்டர்கள் நிலை
திரைப்படங்களைப் பார்க்க யாரும் அங்கு செல்வதில்லை. இவற்றை வைத்திருப்பவர்களுக்கு அவற்றை இயக்குவதைத் தவிர வேறு வழியில்லை, நிதி காரணங்களால் மூடப்பட்ட பல தியேட்டர்கள் உள்ளன. இது ஒரு நல்ல அறிகுறி அல்ல என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு சல்மான் கான் தெரிவித்தார்.