'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்!
டெல்லி: இந்திய உளவு அமைப்பான, ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) தலைவராக சமந்த் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மிக முக்கியமான உளவு அமைப்பு 'ரா'. இது வெளிநாட்டிலும் உளவாளிகளை கொண்ட பரந்து விரிந்த ஒரு அமைப்பாகும். இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தின்போது தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக, அந்த நாட்டு அரசுக்கு முன்பே இந்தியா எச்சரிக்கை விடுத்தது. அது 'ரா' வழங்கிய இன்புட்டை வைத்துதான். அந்த அளவுக்கு இந்திய உளவு அமைப்பு சர்வதேச நாடுகளிலும் வலுவாக உளவுத் தகவல்களை சேகரித்து வருகிறது.
இப்படிப்பட்ட முக்கியமான 'ரா' அமைப்பின் இன்சார்ஜ் என்ற பொறுப்பில் இருந்தவர்தான் சமந்த் கோயல். இப்போது அவர், 'ரா' தலைவராக்கப்பட்டுள்ளார். அதேபோல இந்திய உளவு அமைப்பின் காஷ்மீர் பிரிவில் 2வது இடத்தில் இருந்த அரவிந்த் குமார், முதலிடத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். அதாவது உளவுத்துறை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சமந்த் கோயல் மற்றும் அரவிந்த் குமார் ஆகிய இருவருமே, 1984ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரிகளாகும். 1990களில் பஞ்சாப்பில் பிரிவினைவாத தீவிரவாதம் அதிகரித்தபோது, திறமையாக செயல்பட்டு, அதை முடிவுக்கு கொண்டுவர உதவியவர் சமந்த் கோயல். துபாய், லண்டன் ஆகிய நகரங்களிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
அரவிந்த் குமார், அசாம் மேகாலயா கேடரை சேர்ந்தவர். பீகார் பிரிவு, உளவுத்துறை தலைவராக இருந்தவர். இதுவரை 'ரா' தலைவராக பதவி வகித்தவர், அனில் தம்சனா. உளவுத்துறை இயக்குநராக இருந்தவர் ராஜிவ் ஜெயின் என்பது குறிப்பிடத்தக்கது.