மக்களவை தற்காலிக சபாநாயகராக பாஜக மூத்த தலைவர் சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட வாய்ப்பு?
டெல்லி: மக்களவை தற்காலிக சபாநாயகராக சந்தோஷ்குமார் கங்கார் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அவருடன் 60 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார்.
இந்த நிலையில், 17-வது மக்களவைக்கான தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்யும் பணியில் பாராளுமன்ற விவகாரத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, பரெய்லி தொகுதி பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சந்தோஷ் குமார் கங்வார் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
மீண்டும் விரிசல் விழுமா அதிமுகவில்.. ஓங்கும் ஓபிஎஸ் கை.. பெரும் அதிர்ச்சியில் எடப்பாடியார் தரப்பு!
மக்களவை நிரந்தர சபாநாயகராக மேனகா காந்தி நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேனகா காந்தியும் 8 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.
எனினும், சந்தோகுமார் கங்வார் மற்றும் மேனகா காந்தி ஆகியோர் இன்று மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்கும் பட்சத்தில், இவர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு தற்காலிக சபாநாயகராகும் வாய்ப்பு கிடைக்கும்.
அதன்படி, கேரள மாநிலம், மவேலிக்கரா தொகுதி எம்.பி., கொடிகுன்னில் சுரேஷ் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் மிக மூத்த உறுப்பினர் அந்தஸ்தில் உள்ளனர். சந்தோஷ்குமார் மற்றும் மேனாக காந்திக்கு இல்லை என்றால், அடுத்து இவர்களுக்கு அந்த வாய்ப்பு செல்லும்.
பொதுவாக, பாராளுமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் கட்சி பேதம் பாராமல் தற்காலிக சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அவர்தான் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். மக்களைவையின் முதல் கூட்டத்தையும் அவர் நடத்துவார். மேலும், புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் நடைமுறையும் அவரது மேற்பார்வையில் நடக்கும்.
கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தபோது, மக்களவையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார்.பின்னர், மக்களவை சபாநாயகராக சுமித்ரா மகாஜன் சபாநாயகராக பதவி ஏற்றார்.